யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் தொடங்கிய காலத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் இழுத்து ஆட்சி அமைப்பது வாடிக்கையாக இருந்தது. இதனால், புதுச்சேரி அரசியல் வரலாற்றில் ஆட்சி கவிழ்ப்பு, குடியரசுத் தலைவர் ஆட்சி, கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் என பல அரசியல் அதிரடி சம்பவங்கள் அரங்கேறின.
நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு தொகுதியிலும் மதுக்கடை உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என பணம் படைத்தவர்கள் அரசியலுக்குள் நுழைந்தனர். அந்த வரிசையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி மும்மத வழிபாட்டுடன் வங்கக் கடலில் கட்சி கொடியை அறிமுகம் செய்து அதிரடி காட்டினார்.
இவரை பாஜக அமைச்சர் ஜான்குமார், அவரது மகனும், சட்டமன்ற உறுப்பினருமான ரிச்சர்ட் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.
தொகுதிதோறும் அறக்கட்டளை மூலம் மதிய உணவு வழங்குவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்று மக்களை தன் பக்கம் இழுக்கத் தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மற்றொருபுறம் புதுச்சேரி அரசையும், முதலமைச்சர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.
இதனால் அதிருப்தியடைந்த முதலமைச்சர் ரங்கசாமி, தன்னை சந்திக்க வந்த மத்திய அமைச்சர்கள், தேசிய செயல் தலைவர் ஆகியோரிடம் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் எனவும் பகிரங்கமாக எச்சரித்தார்.
அதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆகியோரை டெல்லிக்கு அழைத்துப் பேசினார். அமித் ஷா அறிவுறுத்தலின்பேரில் ஜோஸ் சார்லஸ் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன் ஜோஸ் சார்லஸ் டெல்லி சென்று பாஜக முக்கியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதன்மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி இணைவது உறுதியானதாகத் தெரிகிறது.
வரும் தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் அவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த முறை 5 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி கண்டதால் இந்த முறை கொடுக்கும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர பாடுபடும்படி அண்மையில் நடந்த நேர்காணலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த முறை 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தற்போது 15 தொகுதிகளிலும், கடந்த முறை 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இந்த முறை 10 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

