Last Updated:
இந்தியாவின் பருவமழை ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் பசிபிக் பெருங்கடலில் உருவாகிவரும் மிகக் கடுமையான ‘சூப்பர்’ எல் நினோ (Super El Niño) காலநிலை மாற்றம் குறித்து, காலநிலை நிபுணர் பில் மெக்குயர் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ எனப்படுகிறது. வழக்கமாக கடல் வெப்பநிலை 2°C வரை அதிகரித்தால் அதை ‘சூப்பர் எல் நினோ’ என்பார்கள். ஆனால், தற்போது உருவாகிவரும் எல் நினோ வெப்பநிலை 4°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உலகளாவிய காலநிலை மாற்றங்களையும் பேரழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதால், இதை ‘ஹைப்பர் எல் நினோ’ என்றும் குறிப்பிடலாம்.
1997-98 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எல் நினோ உலகளவில் 5.7 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது. தற்போதைய எல் நினோ அதைவிட மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதால், உணவுப் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் பருவமழை ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும். அமேசான் காடுகள், தெற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சியும் காட்டுத்தீயும் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
கலிஃபோர்னியா மாநிலத்தில் ‘வளிமண்டல ஆறுகள்’ (Atmospheric rivers) மூலம் கொட்டித் தீர்க்கும் மழையால் ‘ஏஆர்-கே-ஸ்டார்ம்’ (ARkStorm) போன்ற பேரழிவு ஏற்பட்டு 1 டிரில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பிரித்தானியாவில் சுழல் காற்றுகளும் கடும் வெள்ளப்பெருக்கும் உருவாகும்.
இந்த எல் நினோவின் தாக்கம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், உலகளாவிய சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 1.6°C முதல் 1.7°C வரை உயரக்கூடும். இது வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் உடனடியாகக் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் பேராபத்து நிச்சயம் என ஆய்வாளர் பில் மெக்குயர் எச்சரிக்கிறார்.

