கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘P 4447’ அதிவேகத் தாக்குதல் ரோந்துப் படகு கடற்படையினரின் விசேட சுழியோடி மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி விபத்துக்குள்ளான இப் படகு, நீண்ட சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த 11 ஆம் திகதி மீட்டெடுக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு கப்பல்துறை வளாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 15 ஆம் திகதி விபத்து நடந்த நிலையில் உடனடியாக, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் அங்குலாணை பகுதி கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகு
இச் சம்பவத்தின் போது படகிலிருந்த 11 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த படகின் இரண்டாவது கட்டளை அதிகாரியின் சடலம் கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இறுதி கட்ட நடவடிக்கையாக, சீற்றமான கடல் அலைகள் மற்றும் நீருக்கடியிலான சவால்களுக்கு மத்தியில், சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகு கடற்படைச் சுழியோடிகளால் படிப்படியாக மேற்பரப்பிற்குக் கொண்டுவரப்பட்டது.
இச் சிக்கலான மீட்புப் பணியில் கடற்படையின் கடல்சார் பொறியியல், மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளுடன் இணைந்து இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு கப்பல்துறை தனியார் நிறுவனம் ஆகியவற்றின் தொழில்நுட்ப நிபுணத்துவமும் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

