கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்த முடியாதா..? தலைகீழாக மாறிய இந்திய குடும்பங்களின் உண்மை நிலை!
விலைவாசி உயர்வு, வருமானத்தில் பெரிய உயர்வு இல்லாமல் இருப்பது, அதிகப்படியான பணிநீக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மந்த நிலை, பொத்துறை – தனியார் முதலீடுகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக இந்திய குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகவும் பல வகையில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் குடும்ப செலவுகளை சமாளிக்க தற்போது இருக்கும் ஒரே வழி கடனாக மட்டுமே இருக்கும் காரணத்தால் பெரும்பாலான மக்கள் சொத்துக்களை வாங்குவதற்காக கடன் வாங்குவதை தாண்டி அடிப்படை தேவைகள், முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்கி வருகின்றனர்.

இதுக்குறித்து வெளியான தகவலில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் நாட்டின் மொத்த ஜிடிபியில் 45.5 சதவீதமாக உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 35 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் கடனும், கடன் சுமையும் அதிகரித்து வருகிறது.
இதில் முக்கியமாக வீட்டுக் கடன் அல்லாத கடன்களின் பங்கீடு 58.4 சதவீதமாக உள்ளது, வீட்டுக்கடன் அல்லாத கடன் என்றால் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், கன்ஸ்யூமர் பொருட்கள் அதாவது போன், லேப்டாப், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கடனாக உள்ளது. 2019-20ல் இப்பிரிவின் கடன் பங்கீடு 50 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் சொத்துக்களை வாங்குவதற்காக பெறும் கடனை காட்டிலும் மற்ற விஷயங்களுக்கான கடன் வாங்குவது அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.
தற்போது அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் வாங்கப்படும் சிறு சிறு பொருட்களுக்கு, தினசரி தேவைகளுக்கான பொருட்களும், மளிகை பொருட்களுக்கும் கூட ஈஎம்ஐ ஆப்ஷன் அளிக்கப்படும் காரணத்தால் போதுமான வருமானம் இல்லாத காலத்தில் மக்கள் அதிகளவில் கடன் வாங்கி தங்களுடைய செலவுகளை செய்து வருகின்றனர்.
இதேவேளையில் ஆர்பிஐ இதை கண்டு அஞ்சவில்லை, இதற்கு முக்கிய காரணம் இந்திய வங்கித்துறையில் 2028 வரையிலான காலக்கட்டத்தில் வாராக் கடன் மதிப்பு 2 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மக்கள் வாங்கும் கடனை தொடர்ந்து திருப்பி செலுத்தி வருவதால் வாராக் கடன் அச்சம் வங்கிகளுக்கு இல்லாத காரணத்தால் வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் அச்சமில்லாமல் உள்ளது. அடுத்தாக இந்திய குடும்பங்களின் சொத்துக்களை ஒப்பிடும் போது கடன்களின் அளவு குறைவாக இருக்கும் காரணத்தால் கடன் உயர்கிறது என்ற அச்சம் இல்லை.
ஆனால் நீண்ட கால அடிப்படையில் கடன்கள் தொடர்ந்து அதிகரித்து, மக்கள் கடனை திருப்பில் செலுத்துவதை நிறுத்திவிட்டால் பெரும் பாதிப்பு கட்டாயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
