Last Updated:
டெல்லியில் 33 விமானங்கள், ஐதராபாத்தில் 68 விமானங்கள், மும்பையில் 85 விமானங்கள், பெங்களூவில் 73 விமானங்கள் என நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தானது.
இண்டிகோ நிறுவனங்களின் விமான சேவை திடீரென ரத்து செய்யப்படுவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது இண்டிகோ நிறுவனம். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு 2200க்கும் மேலான விமானங்களை, இண்டிகோ இயக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த நிறுவனம் விமானம் ரத்து, விமானம் தாமதம் என தீவிர பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறுகள், மோசமான வானிலை உள்ளிட்டவை இந்த குழப்பத்திற்கு காரணமாக கூறப்பட்டாலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் அறிமுகப்படுத்திய FDTL எனப்படும் “விமான கடமை நேர வரம்பு” விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
விமானிகள் மற்றும் கேபின் குழுவில் உள்ளவர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்கும் இந்த புதிய விதிகள், அவர்களின் பணி அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய விதிமுறையின் கீழ், ஒரு விமானிக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 48 மணிநேரம் ஓய்வு தர வேண்டும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இரவுப்பணியில் அமர்த்தக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளால் பல்வேறு விமான நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பாக, DGCA விதிகளுக்கு ஏற்றவாறு இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் புதன்கிழமை ரத்தாகின. வியாழன்கிழமையும் இதே நிலை தொடர்ந்ததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
டெல்லியில் 33 விமானங்கள், ஐதராபாத்தில் 68 விமானங்கள், மும்பையில் 85 விமானங்கள், பெங்களூவில் 73 விமானங்கள் என நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தானது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு 20 இண்டிகோ விமானங்களின் சேவை கடைசி நேரத்தில் ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மாற்று ஏற்பாடு தர வேண்டும் அல்லது டிக்கெட் பணத்தை திருப்பித் தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்
கடந்த இரண்டு நாள்களாக இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள அந்நிறுவனம், பல எதிர்பாராத சவால்கள் தங்கள் செயல்பாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளது. பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்நிறுவனம், நிலைத்தன்மையை மீட்டெடுக்க நடவடிக்கைகளை தாெடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
Chennai,Tamil Nadu
December 05, 2025 7:32 AM IST


