பெட்டாலிங் ஜெயா,
வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் வரி செலுத்துவதைக் கட்டாய கடமையாக்குவதையும் உறுதிசெய்யும் வகையில் மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் (LHDNM) ஓப் மெட்ரோ 2.0 நடவடிக்கையின் கீழ் அதிரடியாகக் களம் இறங்கியிருக்கிறது 2025 பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை 5 தினங்களுக்கு நடைபெறும் இந்நடவடிக்கையில் அரச சுங்க இலாகாவும் பங்கேற்றுள்ளது.
அடையாளம் காணப்பட்டிருக்கும் 943 சம்பவங்களை விசாரிப்பதற்கு 688 HASIL ஹசில் அதிகாரிகள் களம் இறங்கி இருக்கின்றனர். கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்று வட்டாரங்களில் ஓப் மெட்ரோ 2.0 கவனம் செலுத்தும்.
இந்த நடவடிக்கையில் வருமான தணிக்கை வசூலிப்பு, சட்ட நடவடிக்கை, வியூக இணக்கம், வரி செலுத்தியது மீதான ஆய்வு ஆகிய 5 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தக் கூட்டு நடவடிக்கையில் வருமான வசூலிப்பு இலாகா, புலன் விசாரணை இலாகா, உளவு இலாகா, ஹசில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், புத்ராஜெயா, சிலாங்கூர் ஆகியவை பங்கேற்கும்.


வருமான வரியைக் குறைத்து அறிவிக்கும் நிறுவனங்கள், வருமானத் தணிக்கையைச் செய்யாத நிறுவனங்கள், வழிகாட்டிகளுக்கு ஏற்ப சலுகைகளைக் கோரும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது இந்நடவடிக்கை கவனம் செலுத்தும். ஓப் மெட்ரோ 2.0 நடவடிக்கையை HASIL தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுங்க இலாகா துணைத் தலைமை இயக்குநர் புவான் நோர்லேலா இஸ்மாயில், மலேசிய அரச சுங்க இலாகா துணைத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹிஷாம் ருஸ்லி, ஹசில், அரச சுங்க இலாகா உயர் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கியிருக்கும் மலேசிய அரச சுங்க இலாகாவுக்கு டத்தோ டாக்டர் அபு தாரிக் நன்றி தெரிவித்தார். மலேசிய அரச சுங்க இலாகாவின் ஒத்துழைப்பும் செயல்பாடுகளும் இந்நடவடிக்கை சுமுகமாக. மேற்கொள்ளப்படுவதற்கு அளப்பரிய பங்கினை ஆற்றுகிறது என்று அவர் தெரிவித்தார்.
வருமான வரி வாரியத்தின் விதிமுறைகளுக்கேற்ப நிறுவனங்கள் முறையாக வரி செலுத்துவது இந்நடவடிக்கை மூலம் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.சட்டதிட்டங்களுக்கு ஏற்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வரி செலுத்துவதன் அவசியத்தை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்நடவடிக்கை வகை செய்யும் என்று டாக்டர் அபு தாரிக் குறிப்பிட்டார்.


