கோலாலம்பூர் | மார்ச் 26, 2026
மலேசிய ஓட்டுநர் உரிமம் (Malaysian Driving Licence) காலாவதியாகி 36 மாதங்களுக்கு மேல் ஆனவர்கள், அரசாங்கத்தின் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட BUDI Madani RON95 (BUDI95) பெட்ரோல் மானியத்தைப் பெறத் தகுதியற்றவர்கள் எனச் சாலைப் போக்குவரத்து வாரியம் (JPJ) அறிவித்துள்ளது.
மானியம் பெறுவதற்கு ஒருவரின் ஓட்டுநர் உரிமம் ‘செயலில்’ இருக்க வேண்டும். அதாவது, உரிமம் காலாவதியான தேதியிலிருந்து 36 மாதங்களுக்குள் (3 ஆண்டுகள்) அதனைப் புதுப்பித்திருக்க வேண்டும் என்று, JPJ தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ராம்லி (Datuk Aedy Fadly Ramli) கூறினார்.
ஒருவரின் உரிமம் காலாவதியாகி 36 மாதங்களைக் கடந்துவிட்டால், அவர் மானியத்திற்குத் தகுதியற்றவராகக் கருதப்படுவார்.
36 மாதங்களுக்கு மேல் காலாவதியான உரிமங்களைச் சாதாரணமாகப் புதுப்பிக்க முடியாது. அத்தகைய நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் மீண்டும் ஓட்டுநர் தேர்வை (Driving Competency Test) எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை உரியக் காலத்தில் புதுப்பித்து, அதனைச் செயல்பாட்டில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் மானியம் பெறுவதற்கு ஓட்டுநர் உரிமத்தில் உள்ள விவரங்களும், அடையாள அட்டையில் (MyKad) உள்ள விவரங்களும் சரியாகப் பொருந்துவது அவசியம். உரிமம் இன்றி அல்லது காலாவதியான உரிமத்துடன் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
மலேசிய அரசாங்கம் தகுதியுள்ள குடிமக்களுக்கு RON95 பெட்ரோலை லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமே ‘BUDI95’ ஆகும். ஓட்டுநர் உரிமம் தொடர்பான இந்த புதிய கட்டுப்பாடு, மானியம் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய அமல்படுத்தப்பட்டுள்ளது.
The post ஓட்டுநர் உரிமம் முடிந்து 36 மாதங்கள் ஆகிவிட்டதா? உங்களுக்கு ‘BUDI95’ மானியம் கிடைக்காது – JPJ எச்சரிக்கை! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

