ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்கமருந்து விதியை மீறியதாக மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஹரியானாவின் சோனேபட்டில் நடந்த தகுதி தேர்வு போட்டியின் போது, ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை கொடுக்க பஜ்ரங் புனியா மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த ஏப்ரல் மாதம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவரை சஸ்பெண்ட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் புனியா மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து, முறையாக நோட்டீஸ் தந்து சஸ்பெண்ட் செய்ய வில்லை என பஜ்ரங் புனியாவின் இடைநீக்கத்தை ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறை குழு ரத்து செய்தது.
இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள், 2021 இன் பிரிவு 2.3 ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டீஸை ஏற்க ஜூலை 11 ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளதாகவும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.


