Last Updated:
கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரில் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார் அர்ஷத் நதீம்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரரையே பாகிஸ்தான் அரசு ஏமாற்றி இருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் என்கிற ஈட்டி எறிதல் வீரர் ஒலிம்பிக்கில் அந்நாட்டிற்குத் தங்கம் பெற்றுக் கொடுத்தார். அவரை பாகிஸ்தான் இளைஞர்கள் ஹீரோவைப் போன்று கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரில் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை வென்று பாகிஸ்தானுக்குப் பெருமை சேர்த்தார்.
சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் நாட்டிற்கு மோசமான பெயர் இருந்து வரும் சூழலில், அர்ஷத் நதீமின் இந்த சாதனை அந்நாட்டுக்கு ஓரளவு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர், நதீமுக்கு மாடு முதல் பணம், நிலம் வரை என ஏராளமான பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் தனியார் நிறுவனங்களும் அர்ஷத் நதீமுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கின.
குறிப்பாக, அவர் ஆயுள் முழுவதும் இலவசமாக எரிபொருளை (பெட்ரோல், டீசல்) பெற்றுக் கொள்ளலாம் என்று சில நிறுவனங்கள் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டன. மேலும், பாகிஸ்தான் மதிப்பில் 30 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அறிவித்திருந்தார்.
மேலும், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாண அரசுகளும் அர்ஷத் நதீமுக்குப் பரிசு மழை வழங்கி கௌரவித்தன. இந்நிலையில், லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த நதீம், பாகிஸ்தான் அரசால் தான் ஏமாற்றப்பட்டது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “எனக்கு ஏராளமான பரிசுகள் அளித்தார்கள் என்பது உண்மைதான். நீங்கள் கவனித்தீர்கள் என்றால், எனக்கு நிலம் வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த வாக்குறுதிகள் போலியானவை. வாக்குறுதி அளித்தபடி எனக்கு நிலம் வழங்கப்படவில்லை. ஆனால், மற்ற அனைத்து பரிசுகளும் எனக்கு வழங்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
July 16, 2025 10:55 PM IST


