ரெ .மாலினி
மலாக்கா,
அம்னோ இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மல் சாலேஹ் விடுக்கும் சவால்களால் மலாக்கா மாநில ஜசெக எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாது என்றும், மலாகா ஐக்கிய அரசிலிருந்து விலகுவது தொடர்பான முடிவுகள் ஜசெக தானே எடுக்கும் என்றும் மலாக்கா மாநில ஜசெக தலைவர் கூ போய் தியோங் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை எல்.தி.பி உணவகத்தில் நடைபெற்ற மலாக்கா ஜசெக மாநாட்டுக்குப் பிறகு கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினரான அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஜசெக வின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்புற நபர்கள் தீர்மானிக்க முடியாது என கூறினார். இந்த மாநாட்டை ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் திறந்து வைத்தார்.
ஐக்கிய அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே டாக்டர் அக்மல் அந்த அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கூ குற்றம்சாட்டினார். சமீபத்தில் நடைபெற்ற உம்னோ இளைஞர் சிறப்பு மாநாட்டில் முஃபாகாட் நேஷனலை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவரது பேச்சே இதற்கான சான்று எனவும் அவர் கூறினார்.
மலாக்கா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் பதவியேற்றபோது, ஒற்றுமையின் அடையாளமாக டி.ஏ.பி க்கு மாநில செயற்குழுவில் (எக்ஸ்கோ) பிரதிநிதித்துவம் வழங்க அழைப்பு விடுத்ததாகவும், அதனை ஏற்றுக்கொண்டே டிஏபி மாநில அரசில் இணைந்ததாகவும் கூ விளக்கினார்.
டிஏபி அதிகாரம் அல்லது பதவிக்காக அரசில் இல்லை என்றும், மாநிலத்தின் நலன், மக்களின் நலன் மற்றும் கட்சியின் பொறுப்புணர்வையே முன்னிலைப்படுத்தி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டிஏபி மலாக்காவின் எதிர்கால அரசியல் திசை குறித்து, கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் கிளை பிரதிநிதிகளின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு, அவை மத்திய செயற்குழு (CEC) முன் விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன், கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ இளைஞர் சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் அக்மல், டிஏபி மலாக்கா மாநில ஒற்றுமை கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று பேசியிருந்தார்




