International
oi-Mani Singh S
தெஹ்ரான்: ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க ஈரான் தலைவர்கள் தெஹ்ரானில் திரண்டுள்ள நிலையில், ஒரே ஒரு குண்டில் அனைவரையும் வீழ்த்தி விடலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த மிரட்டல் பேச்சுக்கு ஈரானும் கடுமையான பதிலடியை கொடுத்து இருக்கிறது.
அமெரிக்கா தாக்குதலில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்த நிலையில், தற்போது முதல் கட்ட போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து 4 மாதங்கள் கழித்து அயேதுல்லா அலி கமேனியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் தொடங்கியுள்ளன.

ஒரே ஒரு குண்டில்..
தெஹ்ரானில் வைக்கப்பட்டு இருந்த அயேதுல்லா அலி கமேனியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஈரானின் உயர் மட்ட தலைவர்கள் பலரும் தெஹ்ரானுக்கு வந்துள்ளனர். அயேதுல்லா அலி கமேனியின் மூன்று மகன்களும் இதில் பங்கேற்றனர். புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மொஜ்தபா கமேனி மட்டும் வெளியில் இதுவரை தலை காட்டவில்லை.
ஜூலை 9 ஆம் தேதி வரை ஈரானின் பல்வேறு நகரங்களில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த ஒரு கருத்து ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் கூறுகையில், ஈரான் தலைவர்கள் அனைவரும் கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று இருக்கிறாகள்.. ஒரே ஒரு ஷூட்டில் (துப்பாக்கி குண்டு) அனைவரையும் வீழ்த்திவிடலாம்.
மக்களை தான் கொல்ல முடியும்
அப்படி செய்தால் பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள். ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறது. கமேனியின் இறுதிச்சடங்கு முடியும் வரை பேச்சுவார்த்தைக்கு சிறிது இடைவெளி எடுக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படாது” என்று கூறியிருந்தார். டிரம்பின் இந்த பேச்சு ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் இது தொடர்பாக கூறுகையில், “மக்களை கொல்ல முடியும். ஆனால் சித்தாந்தத்தை வீழ்த்த முடியாது. நீங்கள் பெர்பியூம் பாட்டிலை உடைத்தீர்கள் என்றால் அதன் வாசனை அனைத்து இடங்களுக்கும் பரவி விடும். உங்களுக்கு இது எல்லாம் புரியப் போவது இல்லை. ஏனெனில், நாகரீகமோ? வரலாறோ? பெருமையோ உங்களுக்கு கிடையாது” என்று காட்டமாக கூறியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான இந்த புதிய வார்த்தை போர் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



