ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த ஜிண்டால்.. ஸ்கோடா, வோக்ஸ்வாகன் நிறுவனத்தை அலேக்காக தூக்கும் JSW..!
இந்திய ஆட்டோமொபைல் துறையில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய சக்தியாக மாறி வருகிறது சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குழுமம். ஏற்கனவே சீனாவின் SAIC மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து MG மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை கூட்டணி முறையில் தயாரித்து ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைந்து, தற்போது தனி பிராண்டில் கார்களை அறிமுகம் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறது. இந்த வேளையில், JSW குழுமத்திற்கு புதிய ஜாக்பாட் அடித்துள்ளது.
உலகளவில் வர்த்தகத்திலும், தயாரிப்பிலும் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும், செலவுகளை குறைத்து, லாபத்தை உயர்த்தும் முயற்சியில் 3 ஆண்டுகளாக இந்தியாவில் உள்நாட்டு நிறுவனத்தின் பார்ட்னரை தேடி வந்தது.

இந்த தேடலில் தொடர்ந்து அடிப்பட்டு வந்த பெயர் JSW, ஆனால் பல முறை இறுதிக்கட்டத்திற்கு எட்ட முடியாத நிலையில், 2026ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து இப்பேச்சுவார்த்தை தீவிரமானது.
இதே காலக்கட்டத்தில் தான் வோக்ஸ்வேகன் குரூப் ஜெர்மனியில் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம், 4 தொழிற்சாலைகள் மூடல் தொடர்பான ஆலோசனையை துவங்கியது. இந்த நிலையில் இந்திய வர்த்தகத்தை கையாள வோக்ஸ்வேகன் குரூப் – JSW குரூப் உடன் செவ்வாய்க்கிழமை அதிகரப்பூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய வர்த்தக பிரிவும், JSW நிறுவனமும் 51:49 கூட்டணியில் இயங்கும் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில்.. ஒப்பந்தத்தின் மதிப்பு, பணிகள், நிர்வாகம் உள்ளிட்ட இதர முக்கியமான விஷங்களை ஆலோசனை செய்ய துவங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும். இப்பணிகள் 2026ல் இறுதிக்குள் உறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது, இந்தியாவில் வெரும் 2.5 சதவீத சந்தை பங்கீட்டை கொண்டு இருக்கும் ஸ்கோடா வோக்ஸ்வேகன் இந்திய நிறுவனம், 20000 கோடி ரூபாய் சுங்க வரி விவகாரத்தில் சிக்கியுள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து தான் மதிப்பீடு கணக்கிடப்படும் என்பதால் இக்கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்புதிய கூட்டணியின் கீழ், தனி நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. இதன் கீழ் ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் மொத்த செயல்பாடுகளும் கொண்டு வந்து JSW தலைமையிலான நிர்வாகம் இயக்கும்.
இதன் மூலம் சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குழுமம் சீன நிறுவனத்தின் குறைவான விலையில் கார்களை தயாரிக்கும் முறையை கொண்டு ஜெர்மனியின் உயர்தரத்திலான கார்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டணியில் உற்பத்தி செலவுகள் பகிரப்பட்டு, இந்தியாவில் இருக்கும் வோக்ஸ்வேகன் உற்பத்தி ஆலையை அதிகளவில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்காக சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான உயர்மட்ட குழு ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்களின் சிஇஓக்களை சமீபத்தில் சந்தித்தார். ஸ்கோடா வோக்ஸ்வேகன் இந்திய நிறுவனத்திற்கு சாம்பாஜ்ஜிநகர் மற்றும் சக்கன் ஆகிய பகுதிகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்களை தயாரிக்கும் அளவுக்கான உற்பத்தி தளம் உள்ளது, ஆனால் இந்தியாவில் 1 லட்சம் கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்று வருகிறது.
