மும்பையைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் ஒரு விபத்தில் பெரிதும் காயமடைந்த பின்னர், எதிர்பாராத வகையில், தன்னை காப்பாற்றிய மனிதர்களின் மனித நேயம் குறித்து பராட்டும் ரெடிட் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தனது வழக்கமான இரவு பயணத்தில், அந்தேரியிலிருந்து சர்ச்கேட் வரை உள்ளூர் ரயிலில் பயணித்திருந்த அவர், காட்கோப்பர் அருகே இறங்கியபோது வெள்ளை நிற டாக்சி ஒன்று தன் மீது மோதியதாக தெரிவித்துள்ளார். மேலும், தன் மேல் மோதிய வாகனம் சம்பவ இடத்தில் நிற்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றது, நானும் அங்கேயே மயங்கி விழுந்தேன், அப்போது, அங்கிருந்தவர்கள் தனக்கு உதவி செய்தனர், அவர்கள் யாரென்றே எனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார்.
அங்கு நடந்தவை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “ஒரு பெண் என் தலையைப் பிடித்துக் கொண்டார். ஒரு கல்லூரி மாணவி ஆம்புலன்ஸை அழைத்தாள். இன்னொருவர், ‘அண்ணா, கண்ணை மூடாதீங்க’ என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அவர்கள் என் பர்ஸை தொடவில்லை, யாரும் என் தொலைபேசியை எடுக்கவில்லை. அவர்கள் எனக்காகவே அங்கு நின்றனர்.”

அவர்களுடைய பெயர்கள் எனக்கு தெரியாது என்றாலும், சரியான நேரத்தில் அவர்கள் செய்த உதவியை தன்னால் ஒருபோதும் மறக்கமுடியாது என்று கூறிய அவர், “இன்று, சார்னி சாலைக்கும், மரைன் லைன்ஸுக்கும் இடையில் ஒரு இடத்தில், வயதானர் ஒருவர் என்னைப் பார்த்து, ‘நீ நலமாக இருக்கிறாயா தம்பி?’ என்று கேட்டார். நான் ஆம் என்று தலையசைத்தேன். ஆனால், உள்ளுக்குள் நான் சற்று உடைந்து போனேன். வலியால் அல்ல, அவர்களின் மனிதாபிமானத்திற்கு எனது நன்றியுணர்வை எப்படி தெரிவிக்கப் போகிறேன் என்று தெரியாமல் தான் உடைந்து போனதாக” அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எளிய, ஆனால் ஆழமான கருத்துடன் தனது பதிவை முடித்த அவர், “இந்த நகரம் உங்களை சுக்கு நூறாக்கலாம். ஆனால், சில நேரங்களில், யாரேன்றே தெரியாத அந்நியர்கள் மூலம் அது உங்களை ஒன்றிணைக்கவும் செய்யும்.”
மும்பையின் “மாயாஜாலம்” இந்த பதிவு, பலரின் இதயங்களைக் கவர்ந்தது. குறிப்பாக, மும்பையின் நெருக்கமான ரயில் பயணங்களில் இதே போன்ற அனுபவங்களை எதிர்கொண்ட பலரும் தங்களது அனுபவத்தை கருத்துப் பகுதியில் நினைவுகூர்ந்தனர்.
Mumbai,Maharashtra
June 07, 2025 3:46 PM IST
ஒரு பெண் என் தலையை பிடித்தார்.. மற்றொரு பெண் ஆம்புலன்ஸை் அழைத்தார் – விபத்தில் சிக்கியவரின் உருக்கமான பதிவு

