Last Updated:
பிரதமர் நவாடா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.ஜே.டி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிராக தேர்தல் வேலைகளை செய்துவருவதாக விமர்சித்துள்ளார்.
பிகார் மாநிலம், நவாடா பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிகார் மாநில காங்கிரஸ் தலைவருக்கு எதிராக ஆர்.ஜே.டி. தனது சொந்தக் கட்சி வேட்பாளரை நிறுத்தியதை இந்த நாடே கண்டது. அதேபோல், எந்த பூத்திலும் ஆர்.ஜே.டி. வெல்லக் கூடாது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது” என பேசியுள்ளார்.
பிகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக பிகார் மாநிலத்தில் வரும் 6ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குப் பதிவு தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் நவாடா பகுதியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நவாடா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசு, சிறு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. பிகார் மாநிலத்தின் 2 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில், எந்த ஊழலும், கமிஷனும் இன்றி நேரடியாக ரூ. 650 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதே காட்டு அரசாகவும், அவர்களது கூட்டணி அரசு, காங்கிரஸ் இருந்திருந்தால் உங்கள் பணம் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும். டெல்லியில் இருந்து விடுவிக்கப்படும் பணம் இறுதியாக கிராமத்தைச் சென்றடையும்போது வெறும் 15 பைசா தான் செல்கிறது என காங்கிரஸே சொல்லியுள்ளது.
பிகார் மாநில காங்கிரஸ் தலைவருக்கு எதிராக ஆர்.ஜே.டி. தனது சொந்தக் கட்சி வேட்பாளரை நிறுத்தியதை இந்த நாடே கண்டது. அதேபோல், எந்த பூத்திலும் ஆர்.ஜே.டி. வெல்லக் கூடாது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவான 11ஆம் தேதிக்கு பிறகு காங்கிரஸும், ஆர்.ஜே.டியும் ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்வார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.
ஒரு காலத்தில் ஆயுதங்களை ஏந்திய மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், இப்போது தங்கள் கைகளில் அரசியலமைப்பை ஏந்தியிருப்பதைப் பார்த்து, நகரங்களில் வசிக்கும் நகர்ப்புற நக்சல்கள் இரவில் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்” என பேசினார்.
November 02, 2025 6:08 PM IST
“ஒரு பூத்திலும் ஆர்.ஜே.டி. வெல்லக்கூடாது.. காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது” – பிரதமர் நரேந்திர மோடி


