வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்.
ஆண்களை விடப் பெண்ணுக்கு ஆடைகளும் அணிகலன்களும் எவ்வளவு அதிகமோ.. அதைவிட அதிகமாக அவள் மீது இருக்கும் கை விலங்குகளும் கட்டுக்களும் அதிகம்…
அத்தகைய கட்டுகளை உடைத்தெறியும் ஒரு நாள் சுதந்திரம் எவ்வாறு கிடைத்தது என்பதைக் குறித்துக் காண்போம்.
மார்ச் 8 அன்று பெண்களைப் புகழ்ந்து பாடி கொண்டாடுகிறார்கள். காரணம், அன்றுதான் உலக மகளிர் தினம். எவ்வளவோ மாதம் இருக்கிறது அதிலும் ஏன் மார்ச் 8 ?.. ஏனெனில் அன்றுதான் பெண்கள் தனது சுதந்திரத்துக்காகப் போராடி அதில் வெற்றியும் கண்டனர்.
ஆம்… 1908 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஆடை தொழிற்சாலையில் உள்ள வேலை நிலைமைகளுக்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் 1909 ஆம் ஆண்டில், முதல் தேசிய மகளிர் தினம் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சியால் அறிவிக்கப்பட்டது. இதன் பின் 1910 ஆம் ஆண்டு உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் வழக்குரைஞர் கிளாரா ஜெட்கின் இந்த நாளைச் சர்வதேச அளவில் கொண்டாடும் யோசனையை முன்மொழிந்தார். பின் 1911 ஆம் ஆண்டு ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வும் இதற்கு வழிவகுத்தது. 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை “ரொட்டி மற்றும் அமைதி’ என்ற முழக்கத்தின் கீழ் வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் கையிலெடுத்தனர். இது கிரிகோரியன் நாட்காட்டியின் படி மார்ச் 8 அன்று நடைபெற்றது.
இறுதியில் அவர்களின் இயக்கம் ரஷ்யாவில் பெண்களுக்கான வாக்குரிமையைப் பெற்றுத்தர வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே 1945 ஆம் ஆண்டு ஐ.நா சபையின் சாசனத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவ கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் முதல் சர்வதேச ஒப்பந்தம் உருவாகியது. அதன் பிறகு மார்ச் 8, 1975 ஆம் ஆண்டு ஐ.நா தனது முதல் சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடியது.

