Last Updated:
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் ரோஜா பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மலர்களுக்கு அதிகரித்துள்ள தேவை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சி காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி மலர் விவசாயிகள் இந்த ஆண்டு கணிசமான லாபத்தை கண்டுள்ளனர். பல ஆண்டுகளாக நஷ்டத்தில் தவித்திருந்த விவசாயிகளுக்கு, இந்த விற்பனை புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 25 வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பூச்சி தாக்குதல், பருவநிலை மாற்றம் மற்றும் போதிய விலையின்மை காரணமாக ரோஜா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 50 சதவீத விவசாயிகள் சாகுபடியை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உற்பத்தி குறைந்த நிலையில், இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் ரோஜா மலர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. வழக்கமான நாட்களில் 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா ₹200 முதல் ₹300 வரை விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு காதலர் தினத்தை ஒட்டி ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஒரு கட்டு ₹1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை சந்தையில் ஒரு தனி ரோஜா மலரின் விலை ₹50 முதல் ₹80 வரை உயர்ந்துள்ளது.
ஓசூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மலர் ஏற்றுமதி ஆன்லைன் வர்த்தக மையம் இதுவரை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இந்த மையம் விரைவில் செயல்படத் தொடங்கினால், உள்ளூர் விவசாயிகள் சர்வதேச சந்தையில் முன்னிலை பெற வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

