ஒருவர் 40 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் PF வட்டி நின்றுவிடுமா? EPFO அமைப்பு சொல்வது என்ன?
பெரும்பாலானோர் கரியர் பிரேக் எடுத்தாலோ அல்லது ஓய்வு பெறும் வயதுக்கு முன்னரே பணியிலிருந்து விலகினாலோ தங்களுக்கு வரும் EPF வட்டி நின்றுவிடும் என்று நினைக்கின்றனர். 58 வயதுக்கு முன்னரே பணியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து அவருக்கு 58 வயது முடியும் வரை வட்டி கிடைக்கும். சிலர் பாதியிலேயே தொழில் முனைவோராக மாற நினைப்பார்கள், சுய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அல்லது 40 வயதுக்கு முன்னரே ஓய்வு பெற்று தங்கள் பிஎஃப் தொகையை திரும்பப் பெறாமல் வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தொடர்ந்து 58 வயது வரை வட்டி வந்து கொண்டே இருக்கும்.
EPFO விதிமுறைகள் கூறுவது என்ன?: ஒருவர் 55 வயதுக்கு முன்னரே ஓய்வு பெற்றாலும் அவருடைய 58-வது வயதை எட்டும் வரை PF அக்கவுண்டில் இருக்கும் தொகைக்கு ஏற்ப வட்டி வழங்கப்படும்.
ஒருவர் 40 வயதில் ஓய்வு பெற்றால் என்ன நடக்கும்?: 40 வயதில் ஓய்வு பெற்ற நபராக இருந்தாலும் அவருடைய PF அக்கவுண்டில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப அடுத்த 18 ஆண்டுகளுக்கு வட்டி வரும். ஆனால் அந்த ஊழியர் மற்றும் அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பில் பங்களிப்பு செய்யப்படும் தொகை நிறுத்தப்படும். வட்டி ஏற்கனவே இருக்கும் தொகைக்கு ஏற்ப வந்து கொண்டே இருக்கும். 50 வயதில் ஒருவர் விருப்ப ஓய்வு பெற்றாலும் அவருக்கு 58-வது வயது வரை வட்டி வழங்கப்படும்.

எப்போது EPF கணக்கு இன்ஆப்பரேடிவ் ஆக மாறும்?: ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வெளிநாட்டில் குடிபெயர்கிறார் அல்லது அவருடைய இறப்பின் காரணமாக மூன்று ஆண்டுகள் வரை பங்களிப்பு எதுவும் செய்யாமல் இருந்தால்.. அந்த அக்கவுண்ட் இன்ஆப்பரேடிவ் ஆக மாறும். அதாவது செயலிழந்ததாகக் கருதப்படும்.
வேலையை விட்டு மாறும் போது பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டுமா?: வேலையை விட்டு நீங்கள் மாறும்போது பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. உங்களுக்குத் தேவைப்பட்டால் பணத்தை எடுக்கலாம். தேவை இல்லை என்றால் அப்படியே வைத்திருக்கலாம்.
நீங்கள் மீண்டும் ஒரு புதிய நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால் பழைய EPF அக்கவுண்ட்டை புதிய நிறுவனத்தோடு சேர்த்து கொள்ளலாம். இதைத்தான் அக்கவுன்ட் ட்ரான்ஸ்பர் என்று சொல்வார்கள்.
ஓரிரு மாதங்கள் ஓய்வெடுக்கும் போதெல்லாம் பிஎஃப் பணத்தை எடுத்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய ஓய்வூதிய சேமிப்பு குறையத் தொடங்கும். மேலும் EPF உறுப்பினர்கள் உங்களுடைய யூஏஎன், கேஒய்சி மற்றும் வங்கி விவரங்களை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம்.
ஒரு சிலருக்கு ஏற்படும் பொதுவான குழப்பம் என்னவென்றால் ஒருவர் வேலையை விட்டு இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் வீட்டில் இருந்தால் வட்டி நின்று விடும் என்று நினைக்கின்றனர். அப்படி இல்லை ஏற்கனவே இருக்கும் பிஎஃப் தொகைக்கு ஏற்ப வட்டி வந்து கொண்டே இருக்கும்.

