Last Updated:
தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து தொடர் இந்த முதலிடப் போட்டியில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் தொடர்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் முன்னணி நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மந்தனா வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டமே இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. அந்தத் தொடரில் 58 மற்றும் 31 ரன்கள் என முக்கிய பங்களிப்பை வழங்கியதன் மூலம், அவர் தற்போது 790 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலின் உச்சத்தில் உள்ளார்.
இதற்கு முன்னதாக முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (782 புள்ளிகள்), தற்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். எனினும், வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளதால், லாரா வோல்வார்ட் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க மந்தனாவுக்குக் கடும் சவால் அளிக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில், உலகத் தரம் வாய்ந்த வீராங்கனைகளைப் பின்னுக்குத் தள்ளி இந்திய வீராங்கனை முதலிடத்தை அலங்கரிப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோனைப் பின்னுக்குத் தள்ளி, ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் அலானா கிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீராங்கனை அலிசா ஹீலி, தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்த கையோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மந்தனா (790 புள்ளிகள்) மற்றும் வோல்வார்ட் (782 புள்ளிகள்) இடையேயான புள்ளி வித்தியாசம் மிகக் குறைவாகவே இருப்பதால், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து தொடர் இந்த முதலிடப் போட்டியில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


