பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை நடைமுறைபடுத்தி நாட்டின் நிதித்துறையைப் பாதுகாக்கப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தடைகளின் கீழ், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிச் சேவைகள் முடக்கப்படுவதுடன், அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைக் கையாள்வதற்கும் தடை விதிக்கப்படும்.
இலங்கையில் இந்த நடைமுறையானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்கு அமைய, 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபையினது சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 2012ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க ஒழுங்குவிதிகளின்படி முன்னெடுக்கப்படுகிறது.
சட்டபூர்வ உத்தரவு
இதன்படி, ஒரு நபர் அல்லது அமைப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெயரிடப்பட்டவுடன், அவர்களின் வங்கி கணக்குகள், நிலம், வாகனங்கள், வீடுகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் முடக்கும் சட்டபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்தத் தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அவற்றை நடைமுறைப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரத்யேக இணையதளம்
இந்நிலையில், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) தரநிலைகளைப் பூர்த்தி செய்யவும், மறைமுகமான நிதி வலைப்பின்னல்கள் ஊடாகப் பயங்கரவாதம் பரவுவதைத் தடுக்கவும் இத்திட்டம் அவசியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சொத்து முடக்கல் உத்தரவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளவும் பிரத்யேக இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் இலங்கை கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பையே இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன எனப் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

