இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) மெகா ஏலத்தில் இலங்கையின் ஆறு வீரர்கள் ஏலம்போனதோடு இன்னும் தேசிய அணிக்குக் கூட ஆடாத இளம் வேகப்பந்து வீச்சாளர் ஏஷான் மாலிங்கவும் வாங்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இடம்பெற்றது. இதில் 577 வீரர்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் 182 வீரர்கள் விலைபோயினர். மொத்தம் 19 இலங்கை வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றதோடு ஆறு வீரர்கள் ஏலம்போயுள்ளனர்.
23 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஏஷான் மாலிங்கவை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி இந்திய நாணயப்படி 1.20 கோடி ரூபாவுக்கு (இலங்கை மதிப்பில் 4.14 கோடி ரூபா) வாங்கியது. அவர் 3,000,000 ரூபா அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த நிலையிலேயே அதிக விலைக்கு வங்கப்பட்டுள்ளார். மேகா ஏலத்தின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மேலும் மூன்று வீரர்கள் விலைபோயினர். அனுபவ வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவை டெல்லி கெபிடல்ஸ் அணி அவரது அடிப்படை விலையான 75 இலட்சம் இந்திய ரூபாவுக்கே வாங்கியது.
லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார 75 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த நிலையில் 1.60 கோடி ரூபாவுக்கு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விலைபோனார்.
இலங்கை அணிக்காக மூன்று வகை கிரிக்கெட்டிலும் துடுப்பாட்டத்தில் சோபித்து வரும் கமிந்து மெண்டிஸை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 75 இலட்சம் இந்திய ரூபாவுக்கு வாங்கியது.
ஏற்கனவே முதல் நாள் ஏலத்தில் இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரையும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முறையே 5.25 கோடி ரூபா மற்றும் 4.40 கோடி ரூபாவுக்கு வங்கியது.
எவ்வாறாயினும் இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க உட்பட குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ, சரித் அசலங்க உட்பட 13 வீரர்கள் விலைபேகவில்லை.
இதன்படி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இலங்கையின் ஏழு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஏற்கனவே இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரணவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை மெகா ஏலத்தில் இந்திய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பண்ட் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைபோன வீரராக 27 கோடி ரூபாவுக்கு லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
இதில் 13 வயதே ஆன பீகாரைச் சேர்ந்த விபவ் சூர்யவன்சி ஐ.பி.எல். இல் இடம்பெறும் மிக இளம் வயது வீரராக பதிவானார். அவரை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 1.10 கோடி ரூபாவுக்கு வாங்கியது.
The post ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஆறு இலங்கை வீரர்கள் விலைபோயினர் appeared first on Thinakaran.
&w=1200&resize=1200,675&ssl=1)