Last Updated:
சிவசேனா நிர்வாகிகள், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு வன்முறை காரணமாக, ஐபிஎல் 2026 தொடரில் வங்கதேச வீரர்கள் விளையாட அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி வீரர்கள் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று ஹரியானாவை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை மரத்தில் தலைக்கீழாக தொங்கவிட்டு, உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்பவரையும் வன்முறை கும்பல் அடித்துக் கொன்றது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்று ஹரியானாவை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹாரியானாவை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகளின் எச்சரிக்கை பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரை பொறுத்தவரையில் ஒரே ஒரு வங்கதேச வீரர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டார். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஜூர் ரஹ்மானை கொல்கத்தா அணி ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களில் முஸ்தஃபிஜூர் ரஹ்மானும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.
Dec 29, 2025 11:54 AM IST


