2020ஆம் ஆண்டு, இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு ஐந்து வருடங்கள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு தற்போது செல்ல இருக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 31ஆம் தேதி சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நியூஸ்18 குழுமத்தின் சி.என்.பி.சி18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டமிடுகிறேன்” என்றும் அறிவித்திருந்தார்.
இந்திய பொருளுக்கு 25 சதவீத வரி மட்டுமின்றி, கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் எனவும், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிசக்தி பொருள்கள் தொடர்பான வர்த்தகத்தை மேற்கொள்வதால் இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்திருந்தார்.
டொனால்ட் டிரம்ப்
குறிப்பாக இந்தியா தான் அதிக வரி விதிக்கும் நாடாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தியா, அமெரிக்காவுடன் அதிக வர்த்தகம் செய்வதாகவும், ஆனால், அமெரிக்கா இந்தியாவுடன் பெரிய அளவில் எந்த வர்த்தகத்தையும் மேற்கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 25 சதவீத வரி வரும் 7ஆம் தேதி முதல் அமலுக்குவரும் என சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்தியா – சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இரு நாட்டு இராணுவ வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக்கம்பிகள் மற்றும் கற்களாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல்
இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதேபோல், சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்த சீனா, ‘இந்த மோதலில் சீன வீரர்கள் நான்கு பேர் தான் உயிரிழந்தனர்’ எனத் தெரிவித்தது. ஆனால், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனா தரப்பில் சுமார் 40 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவித்தன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியா முழுக்க பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘சீனா இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது என்றும், இந்திய இராணுவ வீரர்கள் குறித்தும் பேசிய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தி & உச்சநீதிமன்றம்
இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மஷி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. “சீனா, இந்தியாவின் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டது உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோல் பேசமாட்டீர்கள். நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா?” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி சீனா செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங்
பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணம் உறுதி செய்யப்பட்டு, அவர் பயணம் மேற்கொண்டால், 2019க்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு செல்லும் முதல் பயணமாக இது அமையும். இதில், இரு நாட்டு உறவுகள் குறித்தும், எல்லை விவகாரங்கள் குறித்தும் பேசப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
August 06, 2025 6:21 PM IST

