ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கு.. ஆனா இல்ல..!! Accenture அறிமுகம் செய்த 50:50 ஃபார்முலா..!!
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்செஞ்சர் (Accenture), தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 50:50 என்ற ஃபார்முலா அடிப்படையில், ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு இரண்டு சம பாகங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்செஞ்சர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து சம்பள உயர்வினை கொண்டு வரும். அந்த வகையில் இந்த ஆண்டு சம்பள உயர்வுக்காக காத்திருந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் பெரிய மாற்றம் வந்துள்ளது. புதிதாக 50:50 என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி ஒரு ஊழியருக்கு அறிவிக்கப்படும் மொத்த சம்பள உயர்வில் 50 சதவீதம் அவரது அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் One-time Lump-sum payment முறையில் ஜூன் மாதத்திலேயே வழங்கப்பட்டுவிடும்.

உதாரணமாக ஒரு ஊழியருக்கு 3% சம்பள உயர்வு வழங்கப்பட்டால், அதில் 1.5% அவரது அடிப்படை சம்பளத்தில் நிரந்தரமாக சேர்க்கப்படும். மீதமுள்ள 1.5% ஒருமுறை மொத்த தொகையாக கிடைக்கும். அக்செஞ்சர் நிறுவனத்தில் உள்ள 7.8 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கும், குறிப்பாக இந்தியாவில் உள்ள சுமார் 3.5 லட்சம் ஊழியர்களுக்கும் இந்த முறை பொருந்தும். கடந்த ஆண்டை விட அதிகப்படியான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை கொண்டு வந்ததாக நிறுவனம் கூறுகிறது.
பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த 50:50 முறை பொருந்தாது. பதவி உயர்வினால் கிடைக்கும் சம்பள உயர்வு முழுமையாக அடிப்படை சம்பளத்திலேயே சேர்க்கப்படும். இந்த ஒருமுறை வழங்கப்படும் Lump-sum தொகை, டிசம்பர் மாதம் வழங்கப்படும் வருடாந்திர செயல்திறன் போனஸிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இவை இரண்டுக்கும் தொடர்பில்லை என அக்செஞ்சர் விளக்கம் தந்துள்ளது.
மேலும் அடிப்படைச் சம்பள உயர்வு மற்றும் ஒருமுறை வழங்கப்படும் தொகை ஆகிய இரண்டுமே ஊழியரின் அந்த ஆண்டிற்கான மொத்த வருவாயாக கருதப்படும். இது அவர்களின் போனஸ் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.கடந்த ஆண்டு அக்செஞ்சர் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு வழங்கியிருந்தது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க இப்படி ஒரு மாற்றம் கொண்டுவந்துள்ளது. தற்போதைய உலகளாவிய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊதிய செலவை கட்டுக்குள் வைத்திருக்கவும், அதே நேரத்தில் அதிக ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கவும் இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்துள்ளது.
சில ஊழியர்கள் உடனடியாக கையில் பணம் கிடைப்பதை வரவேற்றாலும், ஒருமுறை வழங்கப்படும் தொகை அடிப்படை சம்பளத்தில் சேராததால், அது நீண்டகால வருவாய் வளர்ச்சியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.

