நாம் ‘அன்னக்கா’ என பாசமுடன் அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு இம்முறை ‘சாகித்திய ரத்னா’ விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் இந்த உயரிய தேசிய விருது தமிழர் தரப்பில் ஆண்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இம்முறை இந்த கௌரவத்திற்கு ஒரு தமிழ்ப்பெண் ஆளுமை தெரிவாகியிருக்கிறார்.
ஒரு பெண் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர் யார்…? என்ற கேள்வியைத்தான் முன்னைய – இன்றைய தலைமுறை வாசகர்கள் விழியுயர்த்திக் கேட்பார்கள். அப்படி ஒருவர் தமிழ்ப் பெண்ணாக தமிழ் ஊடகத்துறையில் அமைதியாக பணிதொடருவதென்பது மிகப்பெரிய ஆச்சரியம், சாதனை.
அவர்தான் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை. இலக்கிய உலகில் தொடக்க காலத்தில் ‘யாழ்நங்கை’ என அறியப்பட்ட இவரை 1972 முதல் நன்கு அறிவேன்.
அவர் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக 1962 ஆம் ஆண்டு இணைந்தார். அப்போது இலக்கியப்பிரதிகளை படிக்கும் ஆர்வமும் துளிர்த்தமையினால் அன்னலட்சுமி அவர்களின் முதல் நூல் விழிச்சுடரை அவரிடம் கேட்டு வாங்கிப்படித்தேன். இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு விழிச்சுடர்.
மூதறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆசிரியராக பணியாற்றிய திருநெல்வேலி சைவப்பாடசாலையில் தமது ஆரம்பக் கல்வியையும் பின்னர் கல்வியங்காடு செங்குந்தா இந்துக்கல்லூரியிலும், மேற்கல்வியை சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் தொடர்ந்த இவர், லண்டன் பரீட்சையிலும் தேறியவர்.
தமது பாடசாலைக்காலத்தில் வெளிச்சம் கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகவும் தனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார்.
இவரால் செம்மைப்படுத்தப்பட்ட பல செய்தி நிருபர்கள் எங்கெல்லாமோ சென்றுவிட்டனர். புலம்பெயர்ந்து விட்டனர். ஆனால், இந்த வழிகாட்டி மரம் நின்ற இடத்திலேயே நின்றது. வழிகாட்டி மரங்கள் நகருவதில்லைதானே?
தனது முதல் கவிதையை 1957 இல் கலைச்செல்வியிலும் முதல் சிறுகதையை 1958 இல் தினகரன் வாரமஞ்சரியிலும் எழுதியிருக்கும் அன்னலட்சுமி, விழிச்சுடர் (குறுநாவல் தொகுப்பு), உள்ளத்தின் கதவுகள் (நாவல்), நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத்தொகுதி), இருபக்கங்கள் (கவிதை), நினைவுப் பெருவெளி(கட்டுரை), ஈழத்தின் இலக்கிய ஆளுமைகள், அன்னலட்சுமி இராஜதுரை சிறுதைகள் முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர்.
ஆங்கிலப்புலமையும் மிக்க அன்னலட்சுமி இராஜதுரை பல வெளிநாட்டு சிறுகதைகளை ஆங்கிலம் மூலம் படித்து தமிழுக்கு தந்துள்ளார். பிலிப்பைன்ஸ், சீனா முதலான நாடுகளில் நடந்த சர்வதேச மகளிர் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்.
இவரது எழுத்துப் பணிகளைப் பாராட்டி இந்து கலாசார அமைச்சு ‘தமிழ் மணி’ விருது வழங்கிக் கெளரவித்தது. சிறந்த பத்திரிகையாளருக்கான எஸ்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை, விருதையும் முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவிடம் பெற்றார்.
கொழும்பு தமிழ் இளைஞர் கலாசார கூட்டமைப்பு, தென்கிழக்கு ஆய்வு மையம், கொழும்பு கலைச் சங்கம், கொழுந்து சஞ்சிகை, கொழும்பு ரோட்டரி அமைப்பு என்பனவும் இவரது பணிகளைப் பாராட்டிக் கெளரவித்துள்ளன.
மல்லிகை இதழும் அட்டையில் இவரது படத்தைப் பிரசுரித்து பாராட்டியுள்ளது.
2003 இல் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம், சிறந்த பத்திரிகையாளருக்கான விருதையும், தங்கப் பதக்கத்தையும் வழங்கிக் கெளரவித்தது. 2004 இல் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கமும் விருது வழங்கிக் கெளரவித்தது.
எமது இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரி ‘சாகித்திய ரத்னா’ திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The post ஏழு தசாப்த காலமாக ஊடகத்துறையில் பிரகாசிக்கும் அன்னலட்சுமி இராஜதுரை appeared first on Thinakaran.
