வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் நிறுவன பயிற்சியாளர்கள் சிங்கப்பூரில் குறுகிய கால பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டம் தான் TEP பாஸ் அனுமதி.
ஆனால், இந்த வேலை அனுமதியை முதலாளிகளும் ஏஜென்ட்களும் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
20 வெளிநாட்டு ஊழியர்கள் ஒரே இடத்தில்.. “உள்வாடகை விட கூடாது” என சொன்ன சக ஊழியருக்கு வெட்*டு
அதாவது அவர்கள், குறைந்த சம்பளம் உள்ள வேலைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கு TEP அனுமதியை பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
இந்த புகார்களை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறிய MOM, இது தொடர்பான சில வழக்குகளின் விசாரணைகளை ஏற்கனவே முடித்துள்ளதாகவும், மீதமுள்ள வழக்குகளின் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறியது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் மட்டும் TEP பாஸ் என்னும் குறுகியகால வேலை பயிற்சி அனுமதி அட்டையை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் சுமார் 120 புகார்களைப் பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.
இருப்பினும் முந்தைய ஆண்டுடன் அதனை ஒப்பிட்டுப் பார்க்க கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை MOM வெளியிடவில்லை.
ஒர்க் பெர்மிட், S பாஸ் போல TEP இல்லை
முதலாளிகளுக்கு ஒர்க் பெர்மிட் அல்லது S பாஸ் அனுமதிகளுக்கு விதிக்கப்படும் ஒதுக்கீடு அல்லது தீர்வைகள் போல TEP அனுமதிக்கு எதுவும் கிடையாது.
ஆகையால் இந்த TEP அனுமதி பெரும்பாலும் ஆதாயத்திற்காக அவர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொழில்துறை சார்ந்தவர்கள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
TWC2 பெற்றுள்ள புகார்கள்
குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களை ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான Transient Workers Count Too (TWC2), TEP அனுமதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக முதலில் கூறியது.
இது தொடர்பாக 2025 மே மாதத்தில் எச்சரிக்கையையும் TWC2 வழங்கியது, அதாவது 2024 டிசம்பர் முதல் தங்களிடம் உதவி வேண்டி வரும் TEP பாஸ் வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அது மேற்கோள் காட்டியது.
முதலாளிகளும், முகவர்களும் Management Executives Washing Dishes போன்ற பாத்திரம் கழுவும் வேலைகளுக்கும் இந்த TEP அனுமதியை பயன்படுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2024 டிசம்பர் 1 முதல் 2025 ஏப்ரல் 26 வரை, TEP அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 13 வழக்குகளை TWC2 விவரித்துள்ளது.
இந்திய ஊழியர்கள் பாதிப்பு
இதில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களில் இந்திய ஊழியர்கள் தொடர்புடைய ஆறு வழக்குகள் இருப்பதாகவும், பங்களாதேஷ் (ஆறு) மற்றும் மியான்மர் (ஒன்று) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நல்ல சம்பளத்தில் சிறந்த வேலைகளை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்த ஏஜென்ட்கள், அந்த வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து S$3,000 முதல் S$5,000 வரை முகவர் கட்டணமாக பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக TWC2 கூறுகிறது.
சொன்ன வேலைகளுக்கு மாற்றாக, உணவு&பான கடைகள், கிடங்குகள், துப்புரவு சேவைகள் மற்றும் சுற்றுலா ஏஜென்சிகள் போன்ற குறைந்த ஊதியத் துறைகளில் அவர்கள் வேலை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
சில நேரங்களில், TEP அனுமதி முறையாக வழங்கப்படுவதற்கு முன்பே ஊழியர்கள் வேலையைத் தொடங்க நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது சிங்கப்பூரின் விதிமுறைகளின் கீழ் சட்டவிரோதமானது.
தினமும் 14 மணி நேரம் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை
சில முதலாளிகள் TEP வழங்குவதை கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தாமதப்படுத்தியதாகவும், மூன்று மாதங்களுக்கு பதிலாக நான்கு மாதங்கள் வரை ஊழியர்களிடம் வேலையை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு தினமும் 14 மணி நேர வேலை வாரத்தில் ஏழு நாட்களும் வேலை இருக்கும் என்ற கடுமையான விதிகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
TEP விதியின்கீழ், குறைந்தபட்ச சம்பளம் S$3,000 என்ற நிர்ணயம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் S$1,600 முதல் S$1,800 வரை மட்டுமே ரொக்கமாகப் பெற்றதாக TWC2 தெரிவித்துள்ளது.
MOM அமலாக்க நடவடிக்கை
கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 6,800 TEP அனுமதிகள் அங்கீகரிக்கப்பட்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த MOM செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார், இதில் பெரும்பாலும் சேவைகள் துறையில் இருந்து தான் விண்ணப்பம் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
TEP அனுமதியை தவறான பயன்படுத்துவதை சமாளிக்க அமலாக்க நடவடிக்கையை முடுக்கிவிட்டதாக அமைச்சகம் கூறியது.
அத்துடன் இந்த அனுமதி அட்டை நிபுணத்துவம், மேலாண்மை, நிர்வாக அல்லது சிறப்புப் பயிற்சிப் பணிகளுக்கானது என்றும், பயிற்சி பெறுபவர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் S$3,000 சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் மீண்டும் MOM உறுதிப்படுத்தியது.
மேலும் மாணவர் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் படிப்பவராக இருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்ச சம்பளம் S$3,000 என இருக்க வேண்டும் என்றும் MOM கூறியது.

