ஏஐ வந்தால் ஐடி ஊழியர்களை விட.. இவங்களுக்கு தான் அதிகம் சம்பளம் கிடைக்கிறது.. யார் இவர்கள்?
செயற்கை நுண்ணறிவு (AI) வந்தால் டெக் துறையில் வேலைவாய்ப்பு பெரிய அளவில் குறையும் என கடந்த சில ஆண்டுகளாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதேவேளையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக ஒரு விஷயம், முற்றிலும் மாறுப்பட்ட சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் மென்பொருள் துறையில் எந்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது என தினமும் கேட்டு வருகிறோம். ஆனால் இதேவேளையில் எலக்ட்ரீஷியன்கள், குளிர்சாதன மற்றும் காற்றோட்ட (HVAC) நிபுணர்கள் போன்ற Blue Collar வேலையில் இருப்பவர்களுக்கான டிமாண்ட் மற்றும் சம்பளம் வேகமாக அதிகரித்து வருகிறது.

எலக்ட்ரீஷியன்களுக்கு 242% வேலைவாய்ப்பு உயர்வு
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் எலக்ட்ரீஷியன்களுக்கான தேவை 242% உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், HVAC நிபுணர்களுக்கான பணியமர்த்தல் 200% அதிகரித்துள்ளது. மேலும், ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை 500%க்கும் அதிகமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் நிறுவனங்களில், தனிப்பட்ட முறையில் பணியாற்றும் பல கோடி பேர் அதிகளவில் சம்பாதித்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மென்பொருளால் இயங்கினாலும், அதன் பின்னணியில் செயல்படும் டேட்டா சென்டர்கள், மின்சார இணைப்புகள், குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் தானியங்கி தொழிற்சாலை உபகரணங்கள் அனைத்தும் இந்த Blue Collar பணியாளர்களையே சார்ந்துள்ளன.
டேட்டா சென்டருக்கு தடையில்லாத மின்சாரம் தேவை. அவற்றின் குளிரூட்டும் அமைப்புகள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். அதேபோல், தொழிற்சாலைகளில் அதிகரித்து வரும் ரோபோடிக்ஸ் மற்றும் தானியங்கி இயந்திரங்களை நிறுவல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திறமையான நிபுணர்கள் அவசியம். இதுதான் இந்த வேலைவாய்ப்பு உயர்வுக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
லேபர் பிளிப்
இந்த மாற்றத்தை ராண்ட்ஸ்டாட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் Labour Flip என்று விளக்குகிறார். அதாவது, ஒரு ஐடி/ஐடீஸ் நிறுவனத்தில் தொடக்கநிலை அலுவலகப் பணிகளை விட திறமையான தொழில்நுட்ப பணிகளுக்கான மதிப்பும் தேவையும் வேகமாக அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த மாற்றம், இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு புதிய போக்கை உருவாக்கியுள்ளது. திறமையான தொழில்நுட்ப பணியாளர்களின் மதிப்பு அதிகரித்து வருவதால், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் சம்பளமும் வேகமாக உயர்ந்து வருகின்றன.
சம்பளமும் வேகமாக உயர்கிறது
வேலைவாய்ப்பு மட்டுமல்ல, சம்பளத்திலும் இந்த மாற்றம் தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் திறமையான Blue Collar பணியாளர்களின் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 5.7% உயர்கிறது. அதே நேரத்தில், தொடக்கநிலை White Collar அலுவலகப் பணியாளர்களின் சம்பள உயர்வு 4% மட்டுமே உயர்கிறது.
இதன் காரணாக, திறமையான தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் இடையிலான சம்பள வித்தியாசம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலை வரும் காலத்தில் Blue Collar – White collar வேலைகளை சரி சமமாக பார்க்கப்படும் உன்னதமான நிலை உருவாகும்.
இதற்கு ஏஐ தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

