Last Updated:
போஜ்புரி நடிகை அஞ்சனா சிங், தன்னையும் மகளையும் AI மூலம் ஆபாசமாக சித்தரித்ததாக சைபர் க்ரைமில் புகார். லக்னோ போலீசார் விசாரிக்கின்றனர்.
தன்னையும் தன் 11 வயது மகளையும் ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து பரப்புவதாக பிரபல போஜ்புரி நடிகை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர், பிரபல போஜ்புரி நடிகையான அஞ்சனா சிங். லக்னோ சைபர் க்ரைம் காவல்நிலையத்திற்குச் சென்ற இவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னையும் தனது மகளையும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தவறாகச் சித்தரித்து சிலர் சோசியல் மீடியாவில் வீடியோ மற்றும் போட்டோக்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த பதிவுகளுடன் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதோடு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருவதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாகப் பிரபல போஜ்புரி நடிகர் ஒருவரின் மேலாளர்தான் இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் பாதுகாப்பின்மை சூழலையும் உருவாக்குவதாகவும் அஞ்சனா சிங் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது குற்றச்சாட்டுக்கான சில ஆதாரங்களை காவல்துறையினரிடம் சமர்பித்து, தன்னையும் தன் மகளையும் தவறாக சித்தரிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே திரைத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஏஐ தொழில்நுட்ப ஆபாச மிரட்டல்கள் எல்லைமீறியுள்ளன. சாதாரண புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து வீடியோக்கள் உருவாக்கியும் லாப நோக்கத்திற்காக ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகையின் மகளை இதேபோல ஆபாசமாக சித்தரித்திருப்பதாகக் கூறப்படுவது, பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இப்படியொரு குற்ற செயலில் ஈடுபட்டவரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என நடிகையின் ரசிகர்கள் பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த லக்னோ சைபர் க்ரைம் போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். அதில் மார்பிங் வேலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகும்.
ஏஐ மூலம் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்.. போலீசில் பிரபல நடிகை பகீர் புகார்.. என்ன நடந்தது?


