இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பின் மிக முக்கியக்கூறு, ரஷ்ய தயாரிப்பான எஸ்-400 ஆகும். இது சமீபத்திய ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் இந்திய – பாகிஸ்தான் போர் பதற்றத்தின் மூலம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அதன் செயல்திறனை கவனத்தில் கொண்டு, இந்திய இராணுவம் கூடுதல் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில், 50 கி.மீ. முதல் 400 கி.மீ. வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நான்கு வகையான ஏவுகணைகள் உள்ளன. இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடம் எஸ்-400இன் தேவை குறித்து பேசியுள்ளது.
எஸ்-400 ஒருபுறம் இருக்க, அதைவிட மேம்பட்ட அமைப்பான எஸ்-500 ஏவுகணையும் விரைவில் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எஸ்-500 ப்ரோமிதியஸ் என்றும் அழைக்கப்படுகிறது. கிரேக்க புராணங்களில், ப்ரோமிதியஸ் என்பதற்கு நெருப்பின் கடவுள் என்று அர்த்தமாகும். அந்த வகையில், இந்த ஏவுகணை அமைப்பானது, பெயருக்கு ஏற்ப நெருப்பு மாதிரி செயல்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, எதிரிகளின் இலக்குகளை தாக்கி தீக்கிரையாக்கும் என்று கூறப்படுகிறது.
எஸ்-400ஐ காட்டிலும் எஸ்-500 கணிசமாக சக்தி வாய்ந்தது. ரஷ்யா முன்பு, இந்தியாவிற்கு எஸ்-500 ஏவுகணைகளை வழங்குவதற்கான கூட்டு உற்பத்தி ஒப்பந்தம் குறித்து பேசியுள்ளது. எனவே, பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகளுக்கு எஸ்-500 நிச்சயம் எச்சரிக்கை விடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எஸ்-500 ஐ, எஸ்-400 இன் “தாதா” என்று குறிப்பிடுகிறார்கள். பெங்காலியில், “தாதா” என்பதற்கு மூத்த சகோதரர் என்று பொருள். அந்த வகையில், திறனின் அடிப்படையிலும், எஸ்-400 ஐ காட்டிலும் எஸ்-500 சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
தூரம்: எஸ்-400 ஏவுகணைகள் 400 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் அதே வேளையில், எஸ்-500 ஏவுகணைகள் 600 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் சக்தி படைத்தது.
இலக்கு வகைகள்: எஸ்-400 ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை இடைமறிப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதே நேரத்தில், எஸ்-500, அதற்கும் மேலாக, பூமியின் சுற்று வட்டப்பாதையில் உள்ள செயற்கைக் கோள்களையும் குறிவைக்கும் வல்லமை படைத்தது.
தாக்குதல் நேரம்: எஸ்-400 ஒரு இலக்கைத் தாக்க சுமார் 9 முதல் 10 வினாடிகள் வரை எடுத்துக் கொள்ளும். அதே நேரத்தில், எஸ்-500 கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகத்தில், அதாவது 3 முதல் 4 வினாடிகளிலேயே தாக்கும்.
எஸ்-500 இந்தியாவின் எல்லைகளில் நிறுத்தப்பட்டால், பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும், குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடனான அதன் எல்லைகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட கச்சிதமாக குறிவைக்க முடியும்.
ரஷ்ய வட்டாரங்களின்படி, எஸ்-500 ஆனது ரேடாரில் இருந்து தப்பிக்கும், போர் விமானங்களையும் குறிவைத்து தாக்கும். சீனா, ஏற்கனவே அத்தகைய ஜெட் விமானங்களை தன்வசம் வைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான், சீனாவிடமிருந்து அவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவிற்கு எஸ்-500இன் தேவையை எடுத்துக்காட்டுகிறது. மேலும், உலகின் வேறு எந்த வான் பாதுகாப்பு அமைப்பும் எஸ்-500 உடன் போட்டியிட முடியாது என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
விஷயங்களை முன்னோக்கிப் பார்த்தால்:
600 கி.மீ. தூர இலக்கைக் கொண்ட எஸ்-500 உடன் ஒப்பிட்டால், அமெரிக்காவின் தாட் (THAAD) அமைப்பு குறைவான இலக்கையே கொண்டுள்ளது. அது 200 கி.மீ. இலக்கை மட்டுமே தாக்கும். எஸ்-500 இன் ஏவுகணைகள் வினாடிக்கு 7 கி.மீ. வேகத்தில் செல்லும், இதனால் 600 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை வெறும் 90 வினாடிகளில் அழிக்க முடியும். இதற்கு நேர்மாறாக, தாட் (THAAD) இன் ஏவுகணைகள், அதிகபட்சமாக வினாடிக்கு 2.5 கி.மீ. வேகத்தில் செல்கின்றன.
ஒரு எஸ்-500 யூனிட்டின் விலை, சுமார் 6,000 கோடி ரூபாய் இருக்கலாம் என்று ரஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், அமெரிக்க தாட் (THAAD) அமைப்பு ரூ.6,800 கோடி அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா, தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை உலகளவில் மிகவும் சக்திவாய்ந்தவை என்று கூறுகிறது, மேலும் தரவுகளும் அதை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், எஸ்-400 மற்றும் எஸ்-500 ஏவுகணைகள் இரண்டும் இணைந்தும் செயல்பட முடியும். மேலும், இந்தியா ரஷ்யாவுடன் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பட்சத்தில், இந்த “பவர்ஹவுஸ் டூயல் ஏவுகணைகள்” இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் சிறந்த திறன் கொண்டதாக இருக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்யா வேறு எந்த நாட்டிற்கும் எஸ்-500 ஐ வழங்க முன்வந்ததில்லை. அமெரிக்கத் தடைகளை மீறி, 2018 ஆம் ஆண்டில் இந்தியா எஸ்-400 ஏவுகணையை வாங்க, தைரியமாக முன்வந்ததற்கு இந்தியா-ரஷ்யாவின் வலுவான உறவுதான் காரணமாகும்.
சமீபத்தில், பாகிஸ்தான் மீது இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தது. இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கின. அந்த வகையில், எஸ்-500 இன் “மேக் இன் இந்தியா” பதிப்பும் அடுத்து உருவாக வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள, இந்தியா மற்றொரு சக்திவாய்ந்த ஆயுதமான மைக்ரோ-ராக்கெட் அமைப்பான ‘பார்கவாஸ்த்ரா’வை உருவாக்கி வருகிறது. இது ட்ரோன் கூட்டங்களை ராக்கெட்கள் மூலம் வீழ்த்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பாகும்.
அந்த வகையில், மே 13 அன்று நடந்த சமீபத்திய சோதனையில், நான்கு ராக்கெட்டுகள் சோதனை செய்யப்பட்டன, ஒவ்வொன்றும் அதன் இலக்கைத் துல்லியமாக தாக்கி அழித்தன. சோதனையின்போது, மூத்த இந்திய ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனர். எனவே, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள பார்கவாஸ்த்ரா விரைவில் எல்லையில் நிறுத்தப்படலாம்.
May 20, 2025 10:25 PM IST
எஸ்-400இன் தாதா: எஸ்-500ஐ களமிறக்கும் இந்தியா… இனி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் தான்…! விரிவான தகவல்

