Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: தமிழக சட்டசபை வரலாற்றில் இன்று யாரும் எதிர்பாராத ஒரு உச்சக்கட்ட பரபரப்பு அரங்கேறியுள்ளது. ‘டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்’ விவகாரத்தில் திமுகவினர் அவையில் தொடர் அமளியில் ஈடுபட, அதுவரை தயார் செய்து வைத்திருந்த உரையை (Script) வாசித்துக் கொண்டிருந்த முதல்வர் விஜய், முதல்முறையாக அதையெல்லாம் ஓரமாக தூக்கி வைத்துவிட்டு நேருக்கு நேராக களத்தில் இறங்கி, ஆக்ரோஷமாகப் பேசியது ஒட்டுமொத்த அவையையும் ஸ்தம்பிக்க வைத்தது.
“தொட்டவனையும் விடமாட்டேன்!” – ஆஃப்-ஸ்கிரிப்ட் பாய்ச்சல்:
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று முதல்வர் விஜய் ஆற்றிய உரை, பேரவையில் பெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, “கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மூலம் கட்சி நிதி (Party Fund) பெற்று ஆட்சி நடத்தினார்கள்; அதை நாங்கள் தற்போது நிறுத்தியிருக்கிறோம்” என்று முதல்வர் விஜய் நேரடியாக திமுகவை விமர்சித்துப் பேசியதால், அவையில் வரலாறு காணாத அமளி வெடித்தது.

“டாஸ்மாக் மூலம் கட்சி நிதி (Party Fund) வாங்கித்தான் கடந்த காலத்தில் ஆட்சி நடத்தினார்கள். அதை நாங்கள் இப்போது அதிகாரத்திற்கு வந்ததும் அதிரடியாக நிறுத்தியிருக்கிறோம்” என்று முதல்வர் விஜய் பேசத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அவையில் பெரும் கூச்சல் குழப்பமும் அமளியும் நிலவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன், “முதல்வர் விஜய் பேசி முடித்ததும், எதிர்க்கட்சித் தலைவருக்குப் பேச உரிய வாய்ப்பு வழங்கப்படும்” என்று அமைதிப்படுத்தினார்.
வார்த்தைகளை நீக்க அமைச்சர் கோரிக்கை:
அமளிக்கு நடுவே எழுந்த தவெக அமைச்சர் ராஜ்மோகன், “திமுக உறுப்பினர்கள் எங்கள் அமைச்சர்களையும், முதல்வரையும் பார்த்து ஒருமையில் பேசுகிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு திமுக உறுப்பினர்கள் பேசிய அவதூறான வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், திமுகவின் கடந்த கால ஆட்சியை ‘டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்’ என்று முதல்வர் விஜய் விமர்சித்தது, தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பிரதான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
திமுக உறுப்பினர்களின் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், உணர்ச்சிப்பொங்க இருக்கையை விட்டு எழுந்து நின்ற முதல்வர் விஜய், தனது வழக்கமான அமைதியான பாணியை மாற்றி, மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசத் தொடங்கினார்:
“மக்கள் பணத்தை ஒரு பைசா கூட நாங்கள் தொட மாட்டோம்! மக்கள் பணத்தை இனிமேல் யாரும் தொடவும் விட மாட்டோம்! அப்படி மக்கள் பணத்தைத் தொட்டவர்களையும் சும்மா விட மாட்டோம்! இந்த டாஸ்மாக் ஊழல், கட்சி நிதி வாங்கிய விவகாரம் என மக்கள் சொத்தை யார் யாரெல்லாம் தொட்டார்களோ, அவர்கள் யாரையும் இந்த தவெக அரசு தப்ப விடாது”
என்று ஆள்காட்டி விரலை நீட்டி மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அதுவரை குறிப்புகளைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த முதல்வர், முதல்முறையாகத் தன்னிச்சையாக ‘ஆஃப்-ஸ்கிரிப்ட்’ (Off-script) சென்று நேரடியாக ஆளுங்கட்சி பாணியில் மிரட்டியது அவையில் தவெக உறுப்பினர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.
“சோபா மாடல் வியாபாரத்தை வெளியே பாருங்க!”
திமுக தரப்பில் இருந்து வந்த சில தனிநபர் கமெண்டுகளுக்கு மிகக் காரசாரமான கவுண்டர் கொடுத்த விஜய், “சட்டசபைக்குள் வந்து சிலர் பேசும் ‘சோபா மாடல்’ என்ன என்று புரிந்து கொள்வதற்கே எனக்கு ரொம்ப நாட்கள் ஆனது. தயவுசெய்து இந்த சோபா, டேபிள் செட் வியாபாரத்தை எல்லாம் சட்டைசபைக்கு வெளியே போய் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் மன்றத்தில் இதற்கெல்லாம் இடமில்லை” என்று மிகக் கடுமையான நக்கல் மற்றும் தொனியில் பதிலடி கொடுத்தார்.
திரைப்படங்களில் வரும் மாஸ் அரசியல் வசனங்களை விட, நிஜ அரசியல் களத்தில் முதல்வர் விஜய் இன்று காட்டிய இந்த ‘ரியல்’ வேகம், எதிர்க்கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள மிக நேரடியான, கடுமையான அரசியல் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

