எல் நினோ காலநிலை தாக்கத்தால் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமை பெப்ரவரி வரை நீடிக்கக்கூடும் எனவும் உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.
எக் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் நூற்றுக்கு நூறு வீதம் காணப்படுவதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த எல் நினோ நிலைமையினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இதுவரை 31,737 குடும்பங்களைச் சேர்ந்த 1,02,624 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியினால் அதிகளவான பாதிப்பை மொனராகலை மாவட்டம் எதிர்கொண்டுள்ளதுடன், வறட்சியினால் பாதிக்கப்பட்ட 28 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 31,310 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக வானிலை ஆய்வு அமைப்பின் தரவுகளின்படி, இவ்வருட இறுதிக்குள் எல் நினோ காலநிலை நிகழ்வு மேலும் தீவிரமடைந்து ‘கடும் எல் நினோ’ நிலையை எட்டக்கூடும். இதன் காரணமாக எதிர்வரும் மாதங்களில் உலகின் பல பிராந்தியங்களில் மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், வறட்சி, வெள்ளம் மற்றும் அதீத வெப்பம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் எல் நினோ தாக்கம் தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதுடன், மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் வழமைக்கு மாறான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் கடலின் குறிப்பிட்ட சில ஆழமான பகுதிகளில் வெப்பநிலை வழமையை விட எட்டு பாகை செல்சியஸிற்கும் அதிகமாக அதிகரித்திருந்ததாகவும், இத்தகைய பாரிய வெப்ப நீர் திரட்சி எல் நினோவை மேலும் தீவிரப்படுத்த வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் எல் நினோவினால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை காரணமாக மொனராகலை, இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மொனராகலை மாவட்டத்தில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 நபர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 நபர்களும், அம்பாறை மாவட்டத்தில் 3,774 குடும்பங்களைச் சேர்ந்த 11,995 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் 2,227 குடும்பங்களைச் சேர்ந்த 8,383 நபர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் 1,688 குடும்பங்களைச் சேர்ந்த 6,842 நபர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 499 நபர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 நபர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

