கோலாலம்பூர்:
மலேசிய-தாய்லாந்து எல்லையான புக்கிட் காயு ஹீத்தாமில், போலி ஹலால் சான்றிதழ்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 26 டன்களுக்கும் அதிகமான உறைந்த கோழி இறைச்சி (Frozen Chicken) அதிகாரிகளால் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வழக்கமான ஆவணச் சோதனையின் போது, இறக்குமதி முகவர் (Import Agent) சமர்ப்பித்த ஹலால் சான்றிதழில் பலத்த சந்தேகங்களும் முறைகேடுகளும் கண்டறியப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படைத் தளபதி ஃபௌஸி யுசோஃப் தெரிவித்துள்ளார்.
“குறிப்பிட்ட அந்தச் சான்றிதழில் இடம் பெற்றிருந்த விவரங்கள், மலேசிய அதிகாரப்பூர்வ கணினி அமைப்பில் (Official System) பதிவாகியிருந்த தரவுகளுடன் முற்றிலும் பொருந்தவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தீவிர சரிபார்ப்பில், அந்த ஹலால் சான்றிதழ்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.
சான்றிதழின் உண்மைத்தன்மை அம்பலமானதைத் தொடர்ந்து, கோழி இறைச்சியைக் கடத்தி வந்த பெரிய ரக வாகனமும், அதிலிருந்த 26 டன் எடையுள்ள உறைந்த கோழி இறைச்சிப் பொதிகளும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசிய நுகர்வோரின் பாதுகாப்பையும் சமய நெறிமுறைகளையும் கேள்விக்குறியாக்கும் இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பலைக் கண்டறிய, தற்பொழுது சம்பந்தப்பட்ட துறைகளின் வாயிலாக மேலதிக விசாரணைகள் மிகவும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.




