Last Updated:
கல்வியறிவற்ற பழங்குடியினரான ஜிதுவிடம் இறப்புச் சான்றிதழோ அல்லது வாரிசுரிமைப் சான்றிதழ்களோ இருக்கவில்லை.
உயிரிழந்த தனது சகோதரியின் சடலத்தை தோளில் தூக்கிக் கொண்டு வங்கிக்கு நடந்தே வந்த நபரால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜிது முண்டா. இவரது ஒரே சகோதரி சுக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த சகோதரி சுக்ரா மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். சுக்ரா முண்டாவின் கணவரும் ஒரே குழந்தையும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதால் அவருக்கு வாரிசு என்று யாருமே இல்லை.
அதனால் அவரது சகோதரனான ஜிது முண்டா, அவரது கணக்கிலிருந்த 19 ஆயிரத்து 300 ரூபாயை எடுப்பதற்காக வங்கிக்கு நடந்தே சென்றுள்ளார். வங்கி மேலாளரை அணுகியபோது, கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் அல்லது சட்டப்பூர்வ வாரிசு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி பணத்தைத் தர மறுத்துவிட்டார்.
கல்வியறிவற்ற பழங்குடியினரான ஜிதுவிடம் இறப்புச் சான்றிதழோ அல்லது வாரிசுரிமைப் சான்றிதழ்களோ இருக்கவில்லை. சிக்கலான அந்த நடைமுறையைப் புரிந்துகொள்ள முடியாமல், அவர் செய்வதறியாது தவித்துத் திரும்பினார். சரி வங்கி அதிககாரி கூறினால் அது உண்மையாகத்தான் இருக்கும் என நம்பிய ஜிது, திங்கட்கிழமை காலை எழுந்ததும், முதல் வேலையாக கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு தன் சகோதரி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எலுமபுக்கூடாத இருந்த அவரது சடலத்தை வெளியே எடுத்திருக்கிறார். பின்னர் அந்த எலும்புக்கூட்டைத் துணியால் சுற்றி தோளில் போட்டுக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே வங்கிக்கு சென்றிருக்கிறார். ஜிது வங்கியை அடைந்ததும், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அவரிடம் விசாரித்த பொதுமக்கள் வங்கி நடைமுறையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். “ஒரு ஏழை மனிதன் தன் சொந்தப் பணத்தைப் பெறுவது இவ்வளவு கடினமா?” என்று அவர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். வங்கி பணியாளர்கள் இரக்கத்தை விட, ஆவணப் பணிகளுக்கே முன்னுரிமை அளிப்பதாக குற்றம்சாட்டினர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஜிதுவை அமைதிப்படுத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவெடிப்பதாக உறுதி அளித்திருக்கின்றனர். இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையில் கையாளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என ஒடிசா கிராமீன் வங்கி விளக்கம் அளித்திருக்கிறது
சம்பவத்தன்று ஜிதுமுண்டா போதையில் இருந்ததாகவும், வங்கி விதிமுறைகளின் படியே தாங்கள் நடந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்திருக்கின்றனர். இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு கணக்குத் தீர்க்கப்படும் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தனது சகோதரியின் சடலத்தை தோளில் தூக்கிக் கொண்டு வங்கிக்கு நடந்தே வந்த நபரால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Odisha (Orissa)

