கோலாலம்பூர்:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தைப் பயன்படுத்தி, மலேசியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் போவதாகச் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த விசாரணைக் கோப்புகளைச் சட்டத்துறை அலுவலகம் (Attorney General’s Chambers) ஆய்வு செய்ததையடுத்து, பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
இதில் வதந்திகளைப் பரப்பிய ஐந்து நபர்களுக்குத் தலா 25,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தவறு செய்த மேலும் நான்கு பேருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு நபர் மீது சிப்பாங் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (Communications and Multimedia Act 1998) கீழ் எடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்: அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் (5 லட்சம்) அபராதம், அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இவை இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “டிஜிட்டல் தளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துங்கள். சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையிலோ அல்லது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு உள்ளடக்கத்தையும் பகிர்வதைத் தவிர்க்கவும்,” என்று அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் டிஜிட்டல் களத்தைச் சுத்தமாகவும், நம்பகத்தன்மையுடனும் வைத்திருக்க உதவும்.




