இலங்கையின் அரச துறையில் ‘தொலைதூரப் பணி’ (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக எரிபொருள் பாவனையைக் குறைக்கவும், தேசிய எரிசக்தி இருப்பை முறையாக முகாமைத்துவம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான பொதுச் சேவைகள் பராமரிப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து இதற்கான இடைக்கால வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளன.
உத்தியோகபூர்வ சந்திப்புகள்
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஸ்கான் செய்யப்பட்ட கையொப்பங்கள், டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கு முதன்மையாக “meet.gov.lk” தளத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 02/2026 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கை கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இந்த புதிய வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தரவுப் பாதுகாப்பு
அத்துடன் அரச ஊழியர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துமாறும், தரவுப் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று மொழிகளிலும் உள்ள விரிவான வழிகாட்டல்களை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://mode.gov.lk/docs/guidelines என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமான ‘டிஜிட்டல் பொருளாதார வரைபடத்தின்’ ஒரு அங்கமாக, பொதுச் சேவையைத் தடங்கலின்றி முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

