எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு (Kumara Jayakody) எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பிரேரணை இன்று (19) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி
அதன்படி, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்குத் தேவையான தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யத் தவறியதன் மூலம் அமைச்சர் தனது கடமையைப் புறக்கணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒரு முக்கியமான தேசிய எரிசக்தி சொத்தை மேற்பார்வையிடுவதில் இத்தகைய பாரதூரமான கவனக்குறைவு அமைச்சரின் அடிப்படைப் பொறுப்பை மீறுவதாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் ஊழல் புரிந்தமை தொடர்பில், கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்தும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

