Tamilnadu
oi-Nantha Kumar R
தூத்துக்குடி: ”திமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையும்படி வற்புறுத்துறாங்க. நான் ஒப்புக்கொள்ளவில்லை. நான் எப்போதும் திமுகவில் தான் இருப்பேன்” என்று இன்று கைதான திமுகவின் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அனிதா ராதாகிருஷ்ணன். முன்னாள் அமைச்சர். இவர் கடந்த மாதம் 20ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசும்போது முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடுமையாக பேசினார். இது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் தான் முதல்வர் விஜய் பற்றி அவதூறு பரப்புவதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
தவெக நகர செயலாளர் செல்வம் சார்பில் இந்த புகார் வழங்கப்பட்டது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதாவதை தவிர்க்க அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தள்ளுபடியானது. இதனால் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து ஏடிஎஸ்பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைக்கு பிறகு மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். ஆனால் திமுகவினர் எஸ்பி அலுவலகத்தை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து மீண்டும் அனிதா ராதாகிருஷ்ணனை எஸ்பி அலுவலகத்துக்குள் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மாலை சுமார் 6 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜராக்க போலீசார் எஸ்பி அலுவலகத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
இந்த சமயத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது அவர், ” எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தினர். தவெக செல்வதற்காக ராஜினாமா செய்ய வலியுறுத்துகின்றனர்; நான் ஒப்புக்கொள்ளவில்லை . நான் எப்போதும் திமுகவில் தான் இருப்பேன். என் அனுமதியின்றி கையெழுத்து வாங்குகின்றனர்” என்று முழக்கமிட்டபடி சென்றார். இந்த சம்பவம் எஸ்பி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

