பெங்களூரு: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்க 14 வயதான இந்திய நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு தேர்வாகி உள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்க உள்ளார்.இதன்மூலம் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுமென்ற அவரது கனவு நிஜமாகி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அவர், ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மொத்தம் 111 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில், இவர்களில் மிக இளம் வயது வீராங்கனையாக தினிதி அறியப்படுகிறார்.
நான் நண்பர்களுடன் அதிகம் வெளியில் செல்ல மாட்டேன். வீட்டில் தனிமையை உணர்ந்தது உண்டு. அப்போதுதான் நீச்சல் பழக ஆரம்பித்தேன். அதில் ஆர்வம் அதிகரித்தது. தீவிரமாக பயிற்சி செய்தேன். இப்போது ஒலிம்பிக் வரை வந்துள்ளேன். எனக்கான இந்த பாதையை தேர்வு செய்தது நான் தான். இதற்காக நிறைய தியாகம் செய்துள்ளேன். ஆனால், எனக்கு இது பெருமை அளிக்கிறது. 14 வயதில் ஒலிம்பிக் செல்கிறேன். அந்த வகையில் என் அர்ப்பணிப்பு அனைத்தும் மதிப்புமிக்கது என கருதுகிறேன் எனக் கூறியுள்ளார் தினிதி.


