Last Updated:
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த வழக்கை மத்திய அரசு விரும்பவில்லை என குற்றம் சாட்டினார்.
தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டம் தொடர்பான வழக்கை தனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமன விதிகள் தொடர்பான சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, இந்த வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முறையிட்டார். இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுதாரர்கள் தரப்பிலான வாதங்கள் முடிந்த பின்னர் இந்த கோரிக்கை வைப்பதை ஏற்க முடியாது என்றார்.
இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று காட்டமாக கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, தனது அமர்வு வழக்கை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு விரும்புவதாகவும், அதனால்தான் நள்ளிரவில் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கை 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வரும் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். வழக்கை தாமதப்படுத்தினால் அவரால் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
November 04, 2025 7:49 PM IST
“என் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்


