(கோகி கருணாநிதி)
பாசிர் கூடாங்:
ஜோகூரில் தனது ஆறாவது கிளையைத் திறந்துள்ள என்.எஸ்.கே. பாசிர் கூடாங் பேரங்காடி, முதல் நாளிலேயே 4,000 முதல் 5,000 வரையிலான வாடிக்கையாளர்களின் வருகையால் பரபரப்பாக காணப்பட்டது.


பாசிர் கூடாங் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய பேரங்காடி, தாமான் மாசாய் உத்தாமா, தாமான் பூங்கா ராயா, பாசிர் கூடாங் தொழிற்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எளிதான கொள்முதல் வசதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.


என்.எஸ்.கே. டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர் கென்னி சென் கூறுகையில், கிளாங் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூர் மாநிலம் முழுவதும் சேர்த்து தற்போது நிறுவனத்தின் 36 பேரங்காடிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த கிளை ஜோகூரில் நிறுவனத்தின் ஆறாவது பேரங்காடி எனத் தெரிவித்தார். இதற்கு முன்பு பாண்டான், உலு திராம், மூவார், ஸ்கூடாய் மற்றும் சன்வே இஸ்கந்தார் பகுதிகளில் இயங்கி வரும் கிளைகளுடன், பாசிர் கூடாங் கிளையும் மாநிலத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்றார்.


மேலும், இக்கட்டிடம் நிறுவனத்திற்குச் சொந்தமான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீண்டகால சேவையை இலக்காகக் கொண்டு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


இந்த பேரங்காடியில் அன்றாட மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கோழி இறைச்சி, கடல் உணவுகள், மீன், இறால், நண்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. அதேவேளை, உணவகங்கள், செல்லப்பிராணி பொருட்கள் விற்பனை நிலையம், ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.
திறப்பு விழாவை முன்னிட்டு ஜூன் 21 முதல் ஜூன் 28 வரை சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.


பேரங்காடிக்கு வருகை தந்த பல வாடிக்கையாளர்கள், “பொருட்களின் விலை மிகவும் நியாயமானதாக உள்ளது. தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்க முடிகிறது. பொருட்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருப்பதால் தேடிக் கண்டுபிடிப்பதும் எளிதாக உள்ளது. அதனால் தான் என்.எஸ்.கே.யை விரும்பி வருகிறோம்,” என்று தெரிவித்தனர்.


தினமும் காலை 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செயல்படும் இந்த புதிய பேரங்காடி, பாசிர் கூடாங் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தரமான பொருட்களை மலிவு விலையில் வழங்கும் புதிய கொள்முதல் மையமாக உருவெடுத்துள்ளது.


