அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் இந்த விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் உள்பட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது.அதாவது சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து களமிறங்கியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது.
மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்து கொள்கிறார். ஏற்கனவே 3 முறை முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவியேற்கிறார். இந்த விழாவில் சந்திரபாபு நாயுடுவுடன் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்பட பலர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதில் பவன் கல்யாணுக்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் நடிகர் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்தும், சந்திரபாபு நாயுடுவும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் தான் ஆந்திரா சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கம் மூலமாகவும், பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்கும் சந்திரபாபு நாயுடுவின் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் விஜயவாடா சென்றுள்ளார். விஜயவாடாவில் அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.
மேலும் இந்த விழாவில் மேலும் பல திரைப்பிரபலங்கள் பங்கேற்ற உள்ளனர். நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், மோகன் பாபு, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் உள்பட பலர் பங்கேற்ற உள்ளனர். இவர்கள் தவிர பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமின்றி தெலுங்கு தேசம் தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களை சேர்ந்த கூட்டணி கட்சி முதல்வர்கள் பங்கேற்கின்றனர். அதன்படி பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களும் விழாவில் பங்கேற்க வாய்ப்புள்ளது.


