இனி ஆதார் அட்டையை கையில் வைத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை என்றும், முகத்தை வைத்து ஆதார் எண்ணை அடையாளம் காட்டும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
ஒருவர் எப்போதும் கையில் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை வைத்துக் கொண்டிருக்கும் தேவையை இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் இல்லாமல் ஆக்கிவிடும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவு கூறியிருக்கிறார்.
ஆதார் சம்வாத் திட்டத்தின் மூன்றாவது தொழில்நுட்பமாக இந்த செயலி இருக்கும் என்றும், இது முகத்தைக் கொண்டும் செய்யறிவு மூலமாகவும் ஆதார் எண்ணை அடையாளம் காணும் என்று எக்ஸ் தளத்தில் விடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஆதார் செயலியானது தற்போது பீட்டா பரிசோதனையில் இருப்பதாகவும், இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், முழு ஆதார் அட்டை விவரங்களையும் ஒருவருக்குப் பகிர்வதற்கு பதிலாக, தேவையான விவரங்களை மட்டும் பகிரும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Aadhaar App
Face ID authentication via mobile app❌ No physical card
❌ No photocopiesFeatures pic.twitter.com/xc6cr6grL0
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 8, 2025
விரைவில், ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் செல்போன்களிலும் இந்த செயலி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இது குறித்து மத்திய அமைச்சர் மேலும் கூறுகையில், ஒரு டேப் செய்தால், பயனாளர்கள், தங்களது ஆதார் அட்டையில் உள்ள ஒரு சில விவரங்களை மட்டும் பகிர முடியும். முழு ஆதார் அட்டையின் கட்டுப்பாடும் தங்கள் வசமே இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஜிபே, போன் பே மூலம் கிட்டத்தட்ட ஒரு யுபிஐ பணப்பரிமாற்றம் போல ஆதார் அடையாளம் சரிபார்க்கும் பணியும் மாறிவிடும். பயனாளர் இனி ஆதார் விவரங்களை முறையாக சரிபார்க்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்ட பிறகே பகிர்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒருவர் உங்களிடம் ஆதார் அடையாளத்தைக் கேட்டால், அவரது க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, உங்கள் முகத்தைக் காட்டினாலோ அல்லது விரல் ரேகையைப் பதிவு செய்தாலோ போதும், மற்றவற்றை அந்த செயலியே பார்த்துக்கொள்ளும்.
வெளியூர் செல்லும்போது, தங்கும் விடுதிகளில் விவரம் கேட்கும்போது இந்த செயலி பயன்படும். இதன் மூலம், ஒருவரிடமிருந்து எதற்காக ஆதார் அட்டைப் பெறப்படுகிறதோ, அதைத் தாண்டி வேறு எந்தக் காரணத்துக்காகவும் இந்த விவரங்களை பெறுபவர் பயன்படுத்த முடியாமல் தொழில்நுட்ப அளவில் பாதுகாப்பாக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் சரி.. ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை வைத்து முகத்தைக் கண்டுபிடித்துவிடுமா? என்பதுதான் பலரது சந்தேகமாக உள்ளது.

