தனது வாழ்க்கை முறைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி ஒத்துவராது என்பதால் அதை ஏற்கவில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை, பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ அணுகியுள்ளது. இதுதொடர்பாக பேசிய ரிக்கி பாண்டிங், ஒரு தேசிய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதை தாம் விரும்பியதாகவும் ஆனால், குடும்பத்தைவிட்டு வெகு நாட்கள் பிரிந்திருக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதால் அதை ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தால், ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை வகிக்க முடியாது என்பதாலும் அதை ஏற்கவில்லை என பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு, இரு உலகக் கோப்பைகளை பெற்று தந்துள்ள ரிக்கி பாண்டிங் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கை இந்திய அணியின் பயிற்சியாளராக்க பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தோனியின் உதவியை பிசிசிஐ நாடியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக லக்னோ அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகுவது குறித்து தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தார். இதேபோன்று கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் கௌதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க பிசிசிஐ தற்போது ஆர்வம் காட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கௌதம் கம்பீரின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி 2022 –இல் ஐபிஎல் கோப்பையை வென்றது. அவரது பயிற்சியின் கீழ் கொல்கத்தா இந்த முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)