Last Updated:
தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், லக்னோவுக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆனால், விருது ஏன் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என கூறினார்.
தனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேசியிருக்கிறார்.
லக்னோவில் நேற்று நடைபெற்ற 30வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எதிரணியை முதலில் பேட்டிங் ஆட அழைத்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பன்ட் 63 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியில், ஷைக் ரசீத் 27 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 37 ரன்களும் எடுத்து அற்புதமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர் சொதப்பிய போதும், ஷிவம் துபே மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். 19 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் ஷிவம் துபே 43 ரன்களும், தோனி 26 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நின்றனர். தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் தோல்வி கண்ட சென்னை அணி, தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
இதற்கிடையே, சேஸிங்கில் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 26 ரன்களை எடுத்து போட்டியை முடித்துக் கொடுத்த தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் தோனி, கிட்டத்தட்ட 2,100 நாட்களுக்குப் பிறகு ஐபிஎல்-இல் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். கடைசியாக 2019இல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த நிலையில் தான் ஆட்டநாயகன் விருது வாங்க சென்ற தோனியிடம், நிகழ்வை தொகுத்து வழங்கிய முரளி கார்த்திக் கடைசியாக எப்போது ஆட்டநாயகன் விருதை வென்றீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தோனி, “இன்று கூட எனக்கு ஏன் விருது கொடுக்கிறார்கள் என்று நான் நினைத்தேன்?. நூர் அஹமது, ஜடேஜா நன்றாக பந்துவீசிய நிலையிலும் எனக்கு ஏன் ஆட்ட நாயகன் விருது ஏன் எனத் தெரியவில்லை. அவர்கள் வீசிய ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினோம்.” எனக் கேள்வி எழுப்பினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 15, 2025 1:18 PM IST


