அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கும் அவரின் மனைவி மிஷெல் ஒபாமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் கடந்த சில நாள்களாகவே வதந்திகள் பரவியபடி இருக்கிறது.
ட்ரம்ப்பின் பதவியேற்பு விழா உள்ளிட்ட உயர் மட்ட அரசியல் நிகழ்வுகளில் பராக் ஒபாமா தனியாகக் கலந்துகொண்டது இத்தகைய வதந்திகளுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில், விவாகரத்து வதந்திகளை மிஷெல் ஒபாமா நிராகரித்திருக்கிறார்.

மேலும், அரசியல் நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கியிருப்பது குறித்து விளக்கமளித்த மிஷெல் ஒபாமா, “இதுபோன்ற முடிவுகளைப் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எடுத்திருக்கலாம். ஆனால், அந்த சுதந்திரத்தை எனக்கு நானே கொடுக்கவில்லை.
என் குழந்தைகளுக்கு அவர்களுடைய வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டியிருந்தது. அதன்காரணமாக அப்படியொரு முடிவை அப்போது நான் எடுக்கவில்லை என்றும் சொல்லலாம். ஆனால், அது வெறும் சாக்குப்போக்காகத் தான் இருக்கும்.

நான் என்ன செய்யவேண்டும் என்று மற்றவர்கள் நினைப்பதைச் செய்யாமல், எனக்கு எது சிறந்தது என்பதை நான் தேர்வு செய்திருக்கிறேன். பெண்களாகிய நாம் போராடுவதும் இதற்காகத்தான் என்று நினைக்கிறேன்.
நானும் என் கணவரும் விவாகரத்து செய்யப்போகிறோம் என்று நினைப்பவர்களால், எனக்கானதை நான் தேர்வு செய்கிறேன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

