2024 மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆளும் பாஜக இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்றும், பாஜக தனியாக 370 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவித்து வந்தது.
மேலும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் தாக்ரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) போன்ற எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’யை உருவாக்கி மக்களவை தேர்தலில் களம்கண்டன.
தேர்தல் தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், பாஜகவிற்கு எதிர்ப்பார்த்த அலை இல்லை என்றும், அவர்கள் இலக்காக வைத்திருக்கும் 400 என்ற எண்ணை அடையமுடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, சந்தர்ப்பவாத கூட்டணியான இந்தியா கூட்டணியை மக்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏராளமான நலத்திட்டங்களால் நாட்டு மக்கள் பாஜக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் வகையில் வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தியதாக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணிக்கு 295 தொகுதிகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சபை அமைந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
பெரும்பான்மைக்கு எவ்வளவு இடங்கள் தேவை:
543 இடங்கள் (2 நியமன எம்.பி.க்கள்) கொண்ட மக்களவை தொகுதிகளில், 272 இடங்களில் வென்றால் மக்களவையில் பெரும்பான்மை கிடைக்கும்.
பெரும்பான்மை இல்லாவிட்டல்: மக்களவை தேர்தல் முடிந்த பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், குடியரசு தலைவர் முதலில் அதிக இடங்களை வென்ற கட்சியையே ஆட்சி அமைக்க அழைப்பார். உதாரனமாக பெரும்பான்மைக்கு 272 தேவைப்படும் நிலையில், ஒரு கட்சி 250 இடங்களை வென்று, மற்ற கட்சிகள் அதற்கும் குறைவான இடங்களை பெற்றிருந்தால், அதிக இடங்களை வென்ற கட்சியையே ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பார்.
ஆனால், அந்த கட்சி அதற்கு பிறகு பெரும்பான்மையை நிருபிக்காவிட்டால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் தலைவரை அழைத்து ஆட்சி அமைக்க கோருவார். இப்படியும் அந்த கூட்டணி பெரும்பான்மையை நிருபிக்காதபட்சத்தில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியின் தலைவரை குடியரசு தலைவர் அழைத்து ஆட்சி அமைக்க கோருவார்.
இத்தனைக்கு பிறகும் ஒரு கூட்டணியால் பெரும்பான்மையை நிருபிக்கமுடியாவிட்டால், குடியரசு தலைவர் ஆலோசனையில் ஈடுபட்டு, இறுதி முடிவை அவரே எடுப்பார். அப்போது அவரால், இரண்டு முடிவுகளை எடுக்க முடியும்.
1. மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பார். அப்போது எந்த கட்சி/கூட்டணி பெரும்பான்மையை நிருபிக்கிறதோ, அவர்களால் ஆட்சியமைக்க முடியும்.
2.அப்படி எவராலும் பெரும்பான்மையை நிருபிக்க முடியாவிட்டால், மறுதேர்தல் நடைபெறும். இது முழுக்க முழுக்க குடியரசு தலைவரின் விருப்புரிமையாகவே இருக்கும்.
மேற்கூறிதை தவிர, பிற கட்சியினர் அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரித்தால் மத்தியில் அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி மைனாரிட்டி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
