பிறகு இந்தியா அதனைத் தடுத்தும், பதிலடியும் கொடுத்தது. இதனால் போர்ப் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தின. இதற்குத்தான் தான், காரணம் என்றும், சண்டையை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்று கூறியும் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல இடங்களில் பல முறை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானிடம் எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் கருதி ராகுல் காந்தி கேட்ட கேள்விக்குப் பதில் தர மத்திய அரசு மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவ்ஹான், “ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளில் சில தவறுகள் நடந்ததால், இந்திய விமானப்படை விமானங்களை இழக்க நேரிட்டதாக” கூறினார். ஆனால், எத்தனை விமானங்களை இழந்தோம் என்ற விவரங்களை வெளியிட அனில் சவ்ஹான் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவ்ஹான், “நம் பக்கம் ஏற்பட்ட இழப்புகள் பற்றி என்னிடம் கேட்டபோது, இவை முக்கியமில்லை என்று சொன்னேன். விளைவுகளும் நீங்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள் என்பதும் முக்கியம். இழப்புகளைப் பற்றிப் பேசுவது அவ்வளவு சரியாக இருக்காது. எத்தனை விமானங்களை அழித்தோம், எத்தனை ரேடார்களை அழித்தோம் என்பதை விரைவில் சொல்வோம். அதைப் பற்றிய தோராயமான மதிப்பீட்டைச் செய்து விரைவில் அதை வெளியிடுவோம்.
மே 10 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், அவர்களின் (பாகிஸ்தானின்) நோக்கம் 48 மணி நேரத்தில் இந்தியாவை மண்டியிட வைப்பதாகும். பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏதோ ஒரு வகையில், அவர்கள் இந்த மோதலை அதிகரித்துள்ளனர். நாங்கள் உண்மையில் பயங்கரவாத இலக்குகளை மட்டுமே தாக்கினோம். 48 மணி நேரம் தொடரும் என்று அவர்கள் நினைத்த நடவடிக்கைகள், சுமார் 8 மணி நேரத்தில் மூடப்பட்டு, பின்னர் அவர்கள் தொலைபேசியை எடுத்துப் பேச விரும்புவதாகக் கூறினர்.
நாங்கள் தாக்குதல் நடத்திய நாளிலேயே (மே 7) பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்திருந்தோம். அதிகாலை 1 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தினோம். தாக்குதல் முடிந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குப் போன் செய்து நாங்கள் இதைச் செய்ததாகக் கூறினோம். எங்கள் தாக்குதல்கள் பயங்கரவாத தளங்களை மட்டுமே குறிவைத்து, இராணுவ நிறுவனங்களைத் தவிர்த்து, குறிப்பாகப் பொதுமக்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதாக அவர்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலுக்கு (DGMO) தெரிவித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
June 03, 2025 10:14 PM IST

