Last Updated:
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுத் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் முதல்நாளான நேற்றும், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். டெல்லியில் போராடிய இளைஞர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
கடும் அமளிக்கு மத்தியில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி நீங்கலாக, மற்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33இல் இருந்து 37ஆக அதிகரிக்கும் இந்த மசோதா விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதுதவிர, வங்கித்துறை மற்றும் புள்ளி விவர நிறுவன சீர்திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மறுபுறம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.
எம்எஸ்எம்இ மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா… நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!


