பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிராக பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 608 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தில் 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆகாஷ் தீப் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களும் விளாசிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்த வெற்றியால் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது போட்டி வரும் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
பர்மிங்காம் வெற்றிக்கு பின்னர் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் ஷுப்மன் கில் கூறியிருப்பதாவது: இந்த வெற்றி என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றக்கூடிய ஒன்று. நான் ஓய்வு பெறும்போதும் இது மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்றாக இருக்கும். இந்த போட்டியை முடித்த விதம் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இன்னும் மூன்று முக்கியமான போட்டிகள் உள்ளன. அடுத்த ஆட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இது நல்லது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் எங்களிடம் தற்போது உத்வேகம் உள்ளது.
பந்து வீச்சு, பேட்டிங்கில் அனைவரும் பங்களித்த விதம் மிகப்பெரிய நேர்மறையான அம்சங்களாகும். வெவ்வேறு வீரர்கள், வெவ்வேறு சூழ் நிலைகளில் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். நாங்கள் விரும்புவது இதுதான். இந்த செயல் திறன்தான் சாம்பியன் அணியை உருவாக்குகிறது. அந்த வகையில் வீரர்கள் செயல்பட்ட விதம் சிறப்பானது” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து வீரர்களின் ஓய்வறையில் ஷுப்மன் கில் கூறும்போது, “வெற்றி பெற நாம் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக, ஒரு டெஸ்ட் வெற்றியைப் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிந்திருந்தேன், குறிப்பாக நாம் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறாத இடத்தில் அதைச் செய்வது என்பது கடினமானது.
அணியில் உள்ள ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். முதல் நாளிலேயே இந்த ஆட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் கூறினோம். அதிலும் குறிப்பாக இந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தோம். அதற்காக அனைவரும் பங் களிப்பு செய்த விதம் சிறப்பானது” என்றார்.