காலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள்
அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கி எமக்கான சுமூகமான, நல்லிணக்கமான
சூழல் ஏற்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி கதைக்க
முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின்
இணைப்பாளர்களில் ஒருவரான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (28) யாழில் இடம்பெற்ற, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை
பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும்
தெரிவிக்கையில்,
அன்றாட வாழ்க்கையில் இருக்கக்கூடிய சவால்களை நீக்காமல் இந்த சட்டத்திற்குள்ளே
எங்களை அடிமையாக வைத்துக்கொண்டு இன்னொரு சட்டமான ஆறாம் திருத்த சட்டத்தின்
ஊடாக கருத்து சுதந்திரத்தை அடக்கி வைத்துக் கொண்டு பேச வாருங்கள் என்றால்,
சட்டங்களாலே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சமூகம் எவ்வாறு சுதந்திரமாக பேச
முடியும்.
தமிழர்களாக ஒன்றிணைதல்
ஆகவே இதற்காக தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கோரி போராடுகின்றோம்.

ஐக்கிய
நாடுகள் சபையாக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனாக இருக்கலாம், சர்வதேச நாணய
நிதியமாக இருக்கலாம், இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் ஏனைய சர்வதேச நாடுகளாக
இருக்கலாம் இவை அனைத்தும் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதன் ஊடாக தான்
இந்த சட்டங்களை நீக்கவும், எமக்கு உதவி செய்யவும் முடியும்.
ஆகவே பேதங்கள் கடந்து எமது மக்கள் தமிழர்களாக ஒன்றிணைந்தது
மகிழ்ச்சிக்குரியது. ஆகவே எமது இலக்கு அடையும் வரை இவ்வாறான போராட்டங்கள்
தொடரும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

