Last Updated:
பொதுவெளியில் தத்தமது நாட்டு மக்களின் கருத்து கணிப்புகள், அரசியல் அழுத்தங்களால் சில உலக தலைவர்கள் இஸ்ரேலைத் வெளிப்படையாக ஆதரிக்க முடியாமல் தவிக்கலாம்
அமெரிக்க துணை அதிபர் வேன்ஸின் விமர்சனத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பதில் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (JD Vance) சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது, “உலகில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே சக்திவாய்ந்த நாடு அமெரிக்கா மட்டும்தான். அப்படியிருக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் விவகாரத்தில் மேற்கொண்டுள்ள இடைக்கால ஒப்பந்தத்தை இஸ்ரேல் அமைச்சர்கள் விமர்சிப்பது சரியல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்காவைத் தவிர எங்களுக்கு இந்தியா போன்ற வேறு சில நட்பு நாடுகளும் உள்ளன. 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பெரிய நாடான இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது” என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் இந்திய மக்களிடமிருந்து தனக்குக் குவியும் ஆதரவு செய்திகளைப் பார்த்து தான் நெகிழ்ந்து போயிருப்பதாகவும் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
நெதன்யாகு தனது பேட்டியில் மேலும் பல முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார். பொதுவெளியில் தத்தமது நாட்டு மக்களின் கருத்து கணிப்புகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகச் சில உலகத் தலைவர்கள் இஸ்ரேலைத் வெளிப்படையாக ஆதரிக்க முடியாமல் தவிக்கலாம். ஆனால், அவர்கள் தனிப்பட்ட முறையில் தன்னைத் தொலைபேசியில் அழைத்து இஸ்ரேலுக்குத் தங்களின் மரியாதையையும் ஆதரவையும் தெரிவித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சைபர் தொழில்நுட்பம் (Cyber Technology) ஆகிய துறைகளில் இஸ்ரேலுடன் நெருக்கமாகச் செயல்படவும், இஸ்ரேல் ராணுவத்தின் நவீன உத்திகளைக் கற்றுக்கொள்ளவும் பல நாட்டுத் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக நெதன்யாகு அந்தப் பேட்டியில் விவரித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்கா மட்டுமே தங்களின் ஒரே ஆதரவாளர் என்ற கருத்தை நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“எங்களுக்கு இந்தியா இருக்கிறது!” – அமெரிக்க துணை அதிபரின் விமர்சனத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி

